பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், 23-வது தவணை நிதியுதவியை பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூன் 20, 2026) மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டம், தாரகேஷ்வரில் நடைபெறும் விழாவில் விடுவிக்கிறார்.

நாடு முழுவதும் உள்ள சுமார் 9.44 கோடிக்கும் அதிகமான தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு, நேரடி பணப் பரிமாற்றம் மூலம் ரூ. 18,880 கோடிக்கும் அதிகமான நிதியுதவி இந்தத் தவணை மூலம் நேரடியாகச் சென்றடையும்.

இந்த நிகழ்வு நாடு முழுவதும் “பிஎம் கிசான் உத்ஸவ் திவாஸ்”  என்று கொண்டாடப்படுகிறது. இதில் சுமார் 2.18 கோடி பெண் விவசாயிகள் பயன்பெறுவார்கள். இந்த நிதி விடுவிப்பின் மூலம், 2019-ம் ஆண்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை வழங்கப்பட்ட மொத்த நிதியுதவி ரூ. 4.46 லட்சம் கோடியைக் கடக்கவுள்ளது. நாடு முழுவதும் உள்ள வேளாண் அறிவியல் மையங்கள், விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் இருந்து ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகள் இந்த நிகழ்வில் காணொலி வாயிலாக இணைவார்கள்.

மேலும், இந்த விழாவில் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், வேளாண் துறையை நவீனப்படுத்தவும் பல்வேறு புதிய திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். குறிப்பாக, மேற்கு வங்காளத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY), டிஜிட்டல் விவசாய மிஷன் (Digital Agriculture Mission) மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் தேசிய இயற்கை விவசாய மிஷன் (National Natural Farming Mission) போன்றவை அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம், உரம் விநியோகம் முதல் பயிர் காப்பீடு வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, விவசாயிகளுக்குச் சிறந்த சேவைகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்திற்காக மட்டும் சுமார் ரூ. 907 கோடிக்கும் அதிகமான நிதி, 45 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இது தவிர, கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ரூ. 213 கோடி மதிப்பிலான 49 புதிய கிராமப்புற சாலைத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். காரிப் பருவத்தின் தொடக்கத்தில் வழங்கப்படவுள்ள இந்த நிதியுதவியும், புதிய தொழில்நுட்பத் திட்டங்களும் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version