அரசு வாகனங்களின் தவறான பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, பொது நிதியைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் நோக்கில், மத்திய அரசு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை வெளியிட்ட அலுவலகக் குறிப்பாணையின்படி, தகுதியுள்ள ஒரு அதிகாரிக்கு ஒரே ஒரு அரசுப் பணியாளர் வாகனம் மட்டுமே ஒதுக்கப்படும். கூடுதல் பொறுப்பு வகித்தாலும் இரண்டாவது வாகனம் வழங்கப்படாது.
இந்த உத்தரவு, 2022 செப்டம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட்ட விரிவான வழிகாட்டுதல்களை வலுப்படுத்துகிறது. அதில் தகுதியுள்ள அதிகாரிகள் மாதந்தோறும் ரூ.3,000 கட்டணம் செலுத்தி, போக்குவரத்துப் படியைத் தவிர்த்து, அரசு வாகனத்தை மாதம் 500 கி.மீ. வரை தனிப்பட்ட பயணங்களுக்குப் பயன்படுத்தலாம் என அனுமதிக்கப்பட்டிருந்தது.
புதிய விதிகளின்படி, ஏற்கனவே ஒரு அமைச்சகம் அல்லது துறையில் பணியாளர் வாகனம் பெற்ற அதிகாரிக்கு, வேறொரு அமைச்சகம், துறை, பொதுத்துறை நிறுவனம் அல்லது தன்னாட்சி அமைப்பின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டாலும், அதற்காகத் தனியாக வாகனம் ஒதுக்கப்பட மாட்டாது. அவர் ஏற்கனவே உள்ள வாகனத்தையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
மேலும், மத்திய அரசு அதிகாரிகள் பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் அல்லது அரசு சார்ந்த அமைப்புகளின் வாகனங்களைத் தங்கள் வசம் வைத்துப் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. அலுவல் பணி அல்லது அங்கீகரிக்கப்பட்ட சுற்றுப்பயணங்களின் போது மட்டுமே இது அனுமதிக்கப்படும். பயன்பாட்டில் இல்லாத வாகனங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் அனைத்துத் துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செலவினத் துறை தெரிவித்துள்ளதாவது: “நிர்வாகத் திறனை மேம்படுத்தவும், அரசு வளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், தவிர்க்கக்கூடிய போக்குவரத்துச் செலவுகளைக் குறைக்கவும் இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.” ‘ஒரு தகுதியுள்ள அதிகாரிக்கு ஒரு அலுவல் வாகனம்’ என்ற கொள்கை, அமைச்சகங்கள் மற்றும் துறைகள் முழுவதும் வாகன நிர்வாகத்தைச் சீரமைத்து, நிதிச் சிக்கனத்தை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விதிமுறைகளை அனைத்து மத்திய அமைச்சகங்களும், துறைகளும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் அரசு வாகனங்களின் தேவையற்ற குவிப்பும், தவறான பயன்பாடும் கட்டுப்படுத்தப்படும் என அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
