ஏழை மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு சுத்தமான சமையல் எரிவாயுவை வழங்கும் நோக்கில் மத்திய அரசு 2016-ஆம் ஆண்டு பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு இலவச எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டு, மரவிறகு மற்றும் பாரம்பரிய எரிபொருட்களின் பயன்பாட்டை குறைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆண்டுதோறும் 14.2 கிலோ எடையுள்ள 12 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வந்தன. 2022-ஆம் ஆண்டு முதல் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.200 மானியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அந்தத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டது. பின்னர் இந்த மானியத் தொகை ரூ.300 ஆக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கை முதலில் ஆண்டுக்கு 9 ஆக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது அது மேலும் குறைக்கப்பட்டு ஆண்டுக்கு 4 சிலிண்டர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் பிரவீன் மால் கனூஜா தெரிவித்துள்ளார்.

உஜ்வாலா பயனாளிகளின் சராசரி ஆண்டு எரிவாயு பயன்பாட்டை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார். மேலும், உலகளவில் நிலவி வரும் எரிசக்தி சந்தை சவால்கள் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் எல்பிஜி விநியோகத்தில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் வீட்டுப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை சுமார் ரூ.100 வரை உயர்ந்து, தற்போது ரூ.950-ஐ தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ரூ.300 மானியம் வழங்கப்படுவதால் அவர்கள் செலுத்தும் தொகை குறைவாகவே உள்ளது.

மேலும், தற்போதைய சந்தை சூழலில் ஒரு சிலிண்டரை மக்களிடம் விநியோகிப்பதற்காக அரசுக்கு சுமார் ரூ.1,600 வரை செலவாகும் நிலையில், பொதுமக்கள் அதைவிட மிகவும் குறைந்த விலையிலேயே சிலிண்டர்களைப் பெறுகின்றனர். குறிப்பாக உஜ்வாலா திட்ட பயனாளிகள் ஒவ்வொரு சிலிண்டருக்கும் சுமார் ரூ.1,000 வரை மறைமுக நன்மை அடைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version