இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மையத்தில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வந்த அவருக்கு, கடைசி நேரத்தில் ஏற்பட்ட காயம் அவரது மறுவருகையைத் தடுத்துள்ளது.
கடந்த ஜூன் 2 முதல் பெங்களூரு CoE மையத்தில் ஹர்திக் பாண்டியா தீவிர உடற்தகுதிப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். 10 ஓவர்கள் முழுமையாக வீசி மேட்ச் சிமுலேஷன் பயிற்சிகளையும் வெற்றிகரமாக முடித்திருந்தார். இதனால் உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஜூன் 11 அன்று தர்மசாலாவில் உள்ள இந்திய அணியுடன் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இறுதி கட்டப் பயிற்சியின் போது அவருக்கு குவாட்ரைசெப்ஸ் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதியில் வீக்கமும் வலியும் ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ அதிகாரியின் அறிக்கை, மிகவும் தாமதமாக இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஹர்திக்கிற்கு காலில் லேசான தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதால், வலியும் வீக்கமும் உள்ளது. இது நீண்ட கால காயம் இல்லை என்றாலும், அடுத்த சில நாட்களுக்குக் காலில் அதிக எடையோ அல்லது அழுத்தமோ கொடுப்பதைத் தவிர்க்குமாறு மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளது. இதனால் அவர் பெங்களூரிலேயே தங்கி, CoE பிசியோதெரபிஸ்டுகளின் கண்காணிப்பில் மீண்டு வரவுள்ளார்.”
கடந்த ஓராண்டிற்கும் மேலாக ஒருநாள் போட்டிகளில் விளையாடாத ஹர்திக், இத்தொடரின் மூலம் மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டிற்குள் நுழையவிருந்தார். ஆனால் இந்தத் தசைப்பிடிப்பு காரணமாக அவர் மேலும் இரண்டு வாரங்கள் பெங்களூரிலேயே சிகிச்சையில் இருக்க வேண்டியுள்ளது.
ஹர்திக் பாண்டியா விலகியுள்ளதால், 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ள இளம் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு மூன்று போட்டிகளிலும் விளையாடும் பொன்னான வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
ஹர்திக் பாண்டியா மட்டுமின்றி, நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியும் தசைநார் கிழிவு காரணமாக இத்தொடரில் விளையாடவில்லை. அவருக்கு மாற்றாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா உடற்தகுதி பெற்று அணியில் இணைய CoE மருத்துவர்கள் அனுமதி அளித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்டியாவை ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட வைக்க பிசிசிஐ திட்டமிட்டிருந்த வேளையில், இந்தத் திடீர் காயம் அணி நிர்வாகத்திற்குச் சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
