தமிழ் சினிமா தனது மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரை இழந்துவிட்டதாக நடிகர் விஷால் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விஷால் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;-
மாபெரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களுக்கு வீரவணக்கம்!
’இயக்குநர் இமயம்’ பாரதிராஜா சார் இன்று காலை நம்மையெல்லாம் விட்டுப்பிரிந்து காலமானார் என்ற அதிர்ச்சியான மற்றும் சோகமான செய்தியைக் கேட்டு மனமுடைந்தேன்.
தமிழ் சினிமாவின் போக்கையே என்றென்றும் மாற்றியமைத்த ஒரு தொலைநோக்கு சிந்தனையாளர் அவர். நம் கிராமங்களின் ஆன்மா, நம் மக்கள் மற்றும் அவர்களின் உணர்ச்சிகளை வேறு யாராலும் முடியாத வகையில் வெள்ளித்திரைக்குக் கொண்டு வந்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக, பல தசாப்தங்களைக் கடந்தும் பார்வையாளர்களின் மனதில் நீங்கா இடம்பிடிக்கும் படியான கதாபாத்திரங்களையும், மறக்க முடியாத பாத்திரப்படைப்புகளையும் உருவாக்கியவர்.
அவரது திரைப்படங்கள் தலைமுறை தலைமுறையாக இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களுக்கு உத்வேகமாக அமைந்துள்ளன. அவர் உருவாக்கிய ஒவ்வொரு காட்சியின் மூலமும் அவரது மரபு தொடர்ந்து வாழ்ந்துகொண்டே இருக்கும். படைப்பாளியாக முத்திரை பதிக்க விரும்பும் எவருக்கும் அவரது படைப்புகள் ஒரு சான்றாகவும், சினிமாவுக்கான பைபிளாகவும் விளங்கும். அவரது மறைவோடு, நம்பமுடியாத சினிமா அனுபவங்களின் ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது.
தமிழ் சினிமா தனது மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரை இழந்துவிட்டது.
அன்புள்ள சார், உங்களுடன் திரையில் செலவிட்ட ஒவ்வொரு நொடியையும் நான் எப்போதும் நெஞ்சில் சுமப்பேன்.
பாண்டியநாடு திரைப்படத்தில் அப்பாவாகவும் மகனாகவும் நாம் இணைந்து பணியாற்றியபோது, உங்களுடன் திரைக்குப் பின்னால் நான் செலவிட்ட நேரம் எனக்குப் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. மாபெரும் இந்தத் திரையுலகில் நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன் என்ற உணர்வை அந்தத் தருணம் எனக்குள் ஏற்படுத்தியது. எப்போதும் ஒரு இளைஞரைப் போல உங்களை நீங்களே சுறுசுறுப்பாகக் கொண்டு சென்ற விதம், அந்தத் தொற்றிக்கொள்ளும் புன்னகையுடனும் கம்பீரக் குரலுடனும் எப்போதும் இளமையோடு இருந்த உங்களின் குணம் ஒரு தனி உத்வேகம்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரமான நேரத்தில் அவரது மனைவி, மகள் ஜனனி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இறைவன் மனவலிமையைத் தரட்டும்.
இறைவனடி சேர்க, பாரதிராஜா சார்.
ஒரு அறிமுக இயக்குநராக, எனது முதல் திரைப்படத்தின் டீசரை இன்று வெளியிடுவது சரியாக இருக்கும் என்று நான் கருதவில்லை. பாரதிராஜா சார் அவர்களுக்குச் செலுத்தும் மரியாதையாகவும், அதே திரையுலகைச் சேர்ந்த ஒருவனாக நான் செய்யும் நன்றிக்கடனாகவும் இந்த டீசர் வெளியீட்டை ஒத்திவைப்பதே நான் செய்யக்கூடிய மிகச்சிறிய காரியம்.
இவ்வாறு கூறியுள்ளார்.
