சென்னையில் 16 வயது சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தலைமைக் காவலரை பணி நீக்கம் செய்து, சென்னை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த 16 வயது சிறுவன், கோடை விடுமுறையையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள உறவினர் குமரேசனின் வீட்டுக்கு வந்துள்ளார். கடந்த , 27-ம் தேதி இரவு குமரேசன், தனது நண்பரான வேலப்பன் என்பவரை வீட்டுக்கு அழைத்து வந்து ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.

சிறிது நேரத்தில் குமரேசன் மதுபோதையில் அங்கேயே படுத்து தூங்கிவிட்டார். ஆனால், போதையில் இருந்த வேலப்பன், அருகில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை எழுப்பி அவரது வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றியதோடு, சிறுவனுக்கு அத்துமீறி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுவன், கூச்சலிட்டதோடு, அருகில் இருந்த டிவி ரிமோட்டால் வேலப்பனின் தலையில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி, அருகில் இருந்த அசோக் நகர் காவல் நிலையத்துக்கு சென்று, நடந்த சம்பவத்தைக் கூறி கதறி அழுதுள்ளார்.

போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, அங்கிருந்த வேலப்பனையும்,  குமரேசனையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது, சிறுவனிடம் மதுபோதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வேலப்பன் அசோக் நகர் காவலர் குடியிருப்பில் வசிப்பதும், வடபழனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

தலைமைக் காவலர் ஒருவரே சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, காவல்துறையின் மீது அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தலைமைக் காவலர் வேலப்பனை பணி நீக்கம் செய்து, சென்னை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version