மதுரை மாவட்டம், மேலூர் அருகே இன்று அதிகாலை நடந்த பயங்கர சாலை விபத்தில், இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி பயணிகளுடன் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, மேலூர் அருகே உள்ள கொட்டாம்பட்டி வஞ்சி நகர் நான்கு வழிச்சாலையில் சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரைத் தாண்டி எதிர்புறம் உள்ள சாலைக்குள் புகுந்தது.

அப்போது, மதுரையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது ஆம்னி பேருந்து பயங்கரமாக நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்தில் ஆம்னி பேருந்து கட்டுப்பாடின்றி சாலையோரத்தில் இருந்த பேருந்து பயணிகள் நிழற்குடையின் மீது மோதி நின்றது. இதில் நிழற்குடை முற்றிலும் நொறுங்கிச் சேதமடைந்தது.

இந்த கோர விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 6ஆக உயர்ந்தது.

விபத்து குறித்து தகவலறிந்த மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ரோந்து குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.

விபத்தினால் நான்கு வழிச்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பின்னர் கிரேன் உதவியுடன் விபத்துக்குள்ளான பேருந்துகள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

மதுரை சரக டி.ஐ.ஜி. அபிநவ்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் ஆகியோர் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version