இயக்குநரும், நடிகருமான பாக்யராத் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். அவரது மறைவுக்கு பலரும் வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் அவரது இல்லத்திற்கு சென்று அவரது புகைப்படத்திற்கு மரியாதை செய்வதை அவ்வப்போது புகைப்படமாக எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் இது குறித்து பட்டுக்கோட்டை பிரபாகர் பார்த்திபனுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
”மதிப்பிற்குரிய சீனியர் திரு.ராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்களுக்கு.. ஜூனியர் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிக்கொண்டது.
நீங்கள் அதீத சோகத்தின் காரணமாக மனதளவில் நலமில்லை என்பதறிவேன் என்பதால் நலமா என்று சம்பிரதாயமாகக் கேட்கவில்லை.
நம் குருவான திரு. கே.பாக்யராஜ் சாரின் இழப்பு தரும் வலியும், வேதனையும், கண்ணீரும், கவலையும் உங்கள் ஒருவருக்கு மட்டுமில்லை. அவர் மீது கொள்ளை கொள்ளையாய் பாசமும், பிரியமும், அன்பும், அபிமானமும் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான நண்பர்களுக்கும் இருக்கிறது. இன்னும் தொடர்கிறது.
நீங்கள் அதைத் தொடர்ந்து சமூக வலைத் தளங்களில் பதிவு செய்கிறீர்கள். மற்றவர்கள் தொடர்ந்து அதைச் செய்வதில்லை. அது மட்டுமே வித்தியாசம். அவரின் ஐம்பது வருட திரையுலகப் பயணத்தில் உங்களுக்கு முன்பும், உங்களுக்குப் பின்புமாக நூற்றுக்கும் மேற்பட்ட உதவியாளர்கள் அவரோடு பணியாற்றியுள்ளார்கள். அவர்களில் நீங்கள் சீனியர். நான் ஜூனியர்.
சோகத்தில் உன் சோகமா, என் சோகமா யாரின் சோகம் பெரியது என்று போட்டியெல்லாம் வைக்க இயலாது. அவரவர் சோகம் அவரவருக்கே. யாரோ ஒருவர் உங்களைத் தரக் குறைவாக தனிப்பட்ட முறையில் விமரிசித்ததை மீண்டும் மீண்டும் பதிவு செய்து யாருக்கும் தெரியாமல் நிகழ்ந்ததை உலகத்திற்கே சொல்லி ஆறுதல் தேடுவது உங்கள் உரிமை.
ஆனால் சமீபத்தில் உங்கள் பதிவொன்றில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலையும் நம் குருவையும் சம்மந்தப்படுத்தி எழுதியிருப்பது குறித்து மட்டுமே எனக்கு நெருடல்கள்..
இது உங்கள் பதிவு:
எழுத்தாளர்கள் சங்க தேர்தல் அவருக்கு சற்று மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அறிந்தேன்.
ஏற்கனவே அவர் நடுநிலையாக/சிறப்பாக செயல்பட்டிருந்ததால் தலைமை பதவிக்கு தகுதியானவராக இருப்பினும்,தேர்தலை சந்திக்கும் போது address தேடி வரும் stress-ஐ சமாளிக்க முடியாமல் சற்றே சிரமப் பட்டதாக கேள்விப்பட்டேன்.
“இது ஒன்றும் பொது தேர்தல் அல்ல, போட்டியின்றி கௌரவமாக தேர்ந்தெடுத்தால் நீங்கள் தலைமைத் தாங்குங்கள் இல்லாவிட்டால் அமைதியாக உங்கள் எழுத்தை கவனியுங்கள்” என நான் அவரிடம் கூறுவதுண்டு. அவர் மறைவிற்கு பின் என்னிடம் சிலர் அவருக்கு பதிலாக அத்தலைவர் பதவிக்கோ செயலாளர் பதவிக்கோ போட்டியிட்டால் அமோக வெற்றி பெறலாம் காரணம் தற்போது தங்கள் மீது அபார அபிப்பிராயம் அனைவருக்கும் உள்ளது என்று கூறினார்கள்.
நான் மென்மையாக அதை மறுத்தேன். என் ஒவ்வொரு சொட்டு உண்மையான கண்ணீருக்கும் உள்நோக்கமான களங்கம் கற்பிக்கப்படும்.என் உணர்வுகள் முழுக்க முழுக்க உன்னதமானது அதை அனுதாபமாக்கி விற்று வெற்று வெற்றி பெற எனக்கு விருப்பமில்லை என்பதை அழுத்தமாக சொல்லி விட்டேன்.வெற்றி பெறும் அணிக்கு என் முன் கூட்டிய வாழ்த்துக்கள்.
தொடர்பாக என் நெருடல்கள்:
1.தேர்தல் தொடர்பாக அவருக்கு மன உளைச்சல் இருந்ததாக நீங்கள் கேள்விதான் பட்டீர்கள். நான் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேல் அவரோடு சங்கத்தில் இணைந்து பணியாற்றியவன். நேரடியாக அறிந்தவன். அந்த மன உளைச்சலை பகிரங்கமாக பொதுக் குழுவில் பேசியதை உறுப்பினர் என்கிற முறையில் வந்திருந்தால் நேரடியாகவே நீங்களும் கேட்டு அறிந்திருக்கலாம்.
2. அவர் மறைந்தது 27 ஆம் தேதி காலை. முதல் நாள் 26 ஆம் தேதி இரவு 10.30 க்கு என்னை போனில் அழைத்து பல வருத்தங்களைப் பகிர்ந்து கொண்டார். தவிர அமைத்திருந்த தேர்தல் அணியில் நானும் இருக்க வேண்டும் என்றார். மறுநாள் அது தொடர்பாக சந்திக்க நேரமும் குறிப்பிட்டார். மறு நாள் சந்திக்காமலேயே மறைந்து விட்டார்.
3. அவர் தேர்தலைச் சந்திக்க விரும்பினார். அந்த அணியையும் தன் கைப்பட எழுதி வைத்திருந்தார். சங்கத்தில் பொறுப்பேற்று பணியாற்றுவதில் உங்களுக்கு ஆர்வம் இல்லை என்று அவர் நினைத்ததால் அந்தப் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை.
4. அவர் கடைசியாக விரும்பியது சங்கத்தின் தேர்தலைச் சந்தித்து உறுப்பினர்களுக்கு தொடர்ந்து நன்மைகள் செய்ய நினைத்தார். அந்தக் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்கிற விருப்பம் எனக்கு ஏற்பட்டதால் அவர் விரும்பி தேர்ந்தெடுத்து வைத்திருந்த அணியினரை ஒருங்கிணைக்கும் முயற்சியில் அவர்மீது அபரிமிதமான அன்பு கொண்டிருக்கும் சில நண்பர்கள் மற்றும் உறுப்பினர்களை ஆலோசித்து தீவிரமாக இறங்கினேன்.
4. அவருக்கு மாற்று என்று யாருமே இருக்க முடியாதென்றாலும், அவரின் கனவுகளை நிறைவேற்றும் வேட்கையும், சங்க உறுப்பினர்களின் மீது அக்கறையும் கொண்ட ஒரு தலைவனை எங்கள் அணிக்குத் தேடினோம். அந்த முயற்சிகளில் ஒன்றாக இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் உங்களைத் தேடி வந்தார். நானும், இயக்குநர் செல்வபாரதியும் இயக்குநர் திரு.சேரனைச் சந்தித்தோம்.
5.தங்களைச் சந்தித்தபோது நீங்கள் பேசியதைப் பதிவு செய்திருக்கிறீர்கள். அப்போது நீங்கள் வைத்த கோரிக்கை அலது நிபந்தனையைத் தவிர்த்திருக்கிறீர்கள். அதை நாகரிகம் கருதி நானும் தவிர்க்கிறேன்.
6. திரு.சேரனுடன் மனம் விட்டு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேசிய பிறகு அவரும் நம் குருவின் அபிமானி என்பதாலும், அவரின் கனவுத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சி அவருக்கும் ஏற்பட்டதாலும் எங்கள் அணியில் தலைமைப் பொறுப்பேற்கச் சம்மதித்தார்.
அதன் பிறகு உருவானதே நம்ம கே.பாக்யராஜ் அணி.
7. உங்கள் பதிவில் என்னை மிகவும் காயப்படுத்தியது இந்த வரிகள்தாம்:
//என் ஒவ்வொரு சொட்டு உண்மையான கண்ணீருக்கும் உள்நோக்கமான களங்கம் கற்பிக்கப்படும்.என் உணர்வுகள் முழுக்க முழுக்க உன்னதமானது அதை அனுதாபமாக்கி விற்று வெற்று வெற்றி பெற எனக்கு விருப்பமில்லை என்பதை அழுத்தமாக சொல்லிவிட்டேன்//
அவர்மீது மாறாத அன்பு மட்டுமல்ல..பக்தியே கொண்டுள்ளவன் நான். இப்படி லட்சம் பேர். எல்லோரின் கண்ணீரும் உண்மையான கண்ணீர்தான்.
எல்லோரின் உணர்வுகளும் உன்னதமானவைதான். அந்த அனுதாபத்தை விற்பனை செய்வதற்காக நாங்கள் களமிறங்கவில்லை. அவரின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றுவதை லட்சியமாகக் கொண்டு இறங்கியுள்ளோம். இதில் கிடைக்கும் வெற்றி வெற்று வெற்றி அல்ல..
லட்சிய வெற்றி! பொறுப்புணர்ச்சியின் வெற்றி! சேவை நோக்கத்தின் வெற்றி! நாங்கள் வென்றால் அமரர் நம் கே.பாக்யராஜ் அவர்களே வென்றதற்குச் சமம்!
ஒவ்வொரு பதிவிலும் வார்த்தை விளையாட்டை மட்டுமே வைத்து எழுதி நல்ல நோக்கங்களை அலட்சியப்படுத்தாதீர்கள் சீனியர்!
நியாயமாக நீங்கள் நம்ம கே.பாக்யராஜ் அணியை வெற்றிபெறச் செய்ய வெறும் வெற்று வாழ்த்துகளோடு ஒதுங்கக் கூடாது சீனியர். ஆனாலும் வாழ்த்தியமைக்கு மொத்த அணியின் சார்பாக நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
