கிருஷ்ணகிரி அருகே உள்ள சுங்கச்சாவடியில் FASTag கட்டணம் கேட்ட ஊழியரை, 30 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிருஷ்ணகிரி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் நாகம்பட்டி பகுதியில் சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. அவ்வழியாக பிக்கப் வேன் ஒன்று சென்றுள்ளது. அந்த வாகனத்தில் ‘பாஸ்ட்டேக்’ கணக்கில் போதிய பணம் இல்லாததால், அங்கிருந்த ஊழியர் வாகனத்தை நிறுத்தி கட்டணம் செலுத்தக் கோரியுள்ளார். இதனால் ஊழியருக்கும் வேன் ஓட்டுநருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த ஓட்டுநர் அங்கிருந்து வாக்குவாதத்துடன் கிளம்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் நடந்து சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு, அந்த ஓட்டுநர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என 30-க்கும் மேற்பட்டோரைத் திரட்டிக்கொண்டு மீண்டும் சுங்கச்சாவடிக்கு வந்துள்ளார். கும்பலாகச் சுங்கச்சாவடிக்குள் புகுந்த அவர்கள், அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர்.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதே ஊழியரை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்து, தாக்கியுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அந்தக் கும்பலிடம் இருந்து ஊழியரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சுங்கச்சாவடியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், இந்த வன்முறைச் சம்பவத்தில் 5 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற நபர்களைப் பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version