மத்திய கிழக்கில் நிலவி வரும் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை விரைவில் உயர்த்தப்படும் என கூறப்படுகிறது. அதேவேளை கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், இறக்குமதிக்கான இந்தியா அந்நிய செலவாணி செலவிடும் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்து, ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருகிறது.

இதற்கிடைஇயில் கடந்த 10ம் தேதி தெலுங்கானாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ரிபொருள் நுகர்வை மிச்சப்படுத்த மக்கள் முன்வர வேண்டும் என்று அறிவுறுத்தினார். கொரோனா காலத்தை போன்றே வீட்டில் இருந்தே வேலை செய்வது, ஆன்லைன் மீட்டிங், வீடியோ கான்பிரஸ் போன்ற முறைகளை மக்கள் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கூறினார். குறிப்பாக, ஓராண்டுக்கு திருமணத்திற்கு தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு, வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதையும், ஆடம்பர செலவு செய்வதையும் தவிர்க்குமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக அந்நிய செலவாணி கையிருப்பு வேகமாக குறைந்து வரும் நிலையில், நிலைமையை சமாளிக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு இன்று அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதன்படி, தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி அதிகரித்து அது தங்கம், வெள்ளியின் விலை மேலும் உயர காரணமாக அமையவுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version