சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டம் தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் தவெக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்து வருகிறது.இதில், தற்போதுள்ள 232 எம்.எல்.ஏக்களில் 116 பேரின் ஆதரவை பெற்று விஜய்யின் ஆட்சி தப்புமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்தநிலையில், தமிழக சட்டப்பேரவை தொடங்கியதும் நம்பிக்கை வாக்கெடுப்பில், தமிழக வெற்றிக் கழக அரசு தொடர்வதற்கான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். இதனை தொடர்ந்து இந்த வாக்கெடுப்பில்  காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களும் தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் ராஜேஷ் குமார் அறிவித்துள்ளார். அவர் பேசியதாவது, நிலையான மதசார்பற்ற ஆட்சி வேண்டும் எனக் குறிப்பிட்டார். மக்களின் தீர்ப்பை மதித்து இந்த முடிவை காங்கிரஸ் தலைமை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மற்ற காங்கிரஸ் உறுப்பினர்களும் தவெகவிற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் எனவும் கூறினார்.

இதனை தொடர்ந்து நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் செல்லச்சாமி தனது உரையில், தவெக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார்.

மாநில உரிமையில் சமரசம் கூடாது – விசிக வலியுறுத்தல்:

இதனை தொடர்ந்து நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 2 உறுப்பினர்களும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாக வன்னி அரசு அறிவித்துள்ளார். அவர் பேசியதாவது,  தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படுவதைத் தவிர்க்கவே தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ள விசிக, எதிர்க்கட்சித் தலைவரை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்தது ஒட்டுமொத்த இந்தியாவிற்கே மிகச்சிறந்த முன்னுதாரணம் எனப் பாராட்டியுள்ளது.

சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுள்ள தவெக அரசு, முழுமையாக 5 ஆண்டுகள் நீடிக்கும் என விசிக எம்.எல்.ஏ. வன்னி அரசு நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதில் தவெக அரசு எந்தவித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என்றும், ஒரு மிகச்சிறந்த அரசாக இது செயல்பட வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

மேலும், தமிழகத்தில் ஆவணப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும், மீனவர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் ஆன்மிகம் என்ற பெயரில் மூடநம்பிக்கைகள் மூலம் மக்களை ஏமாற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கச் சிறப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகளையும் விசிக முன்வைத்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version