பாலஸ்தீனத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையின் (UN) முழு உறுப்பினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற தனது நீண்டகால நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், இஸ்ரேல்–பாலஸ்தீன் பிரச்சினைக்கு அவ்விரு நாடுகளின் பேச்சுவார்த்தை மட்டுமே நிலையான தீர்வை அளிக்கும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் திங்கள்கிழமை நடைபெற்ற பாலஸ்தீன நன்கொடையாளர் குழுவின் (Palestine Donor Group) அமைச்சர்மட்ட கூட்டத்தில், இந்திய வெளியுறவுத் துறை (MEA) செயலாளர் ஸ்ரீப்ரியா ரங்கநாதன் இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்.
இந்த உயர்மட்டக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் (EU), அதன் உறுப்பு நாடுகள், பாலஸ்தீன், சர்வதேச கூட்டாளிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, பாலஸ்தீன ஆணையத்திற்கு நிதி உதவி மற்றும் அந்நாட்டு மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது பேசிய ஸ்ரீப்ரியா ரங்கநாதன், பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா நீண்டகால நண்பராக இருந்து வருகிறது என்றும், பாலஸ்தீனத்திற்கு ஐ.நா. முழு உறுப்பினர் அந்தஸ்து வழங்க இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், சர்வதேச சட்டங்களுக்கு இணங்க, அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் இஸ்ரேலும், பாலஸ்தீனமும் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இணைந்து வாழும் “இரு நாடுகள் தீர்வு” (Two-State Solution) என்ற கொள்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவின் வளர்ச்சிப் பங்களிப்பை எடுத்துக்கூறிய அவர், பாலஸ்தீனத்தில் சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழிற்பயிற்சி உள்ளிட்ட துறைகளில் தேவைக்கேற்ப பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், சுகாதாரம், மகளிர் மேம்பாடு, நிர்வாக அமைப்புகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் இந்தியா முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், இதனைத் தொடர்ந்து மறுவாழ்வு, சுகாதாரம், கல்வி மற்றும் தொழிற்பயிற்சி தொடர்பான புதிய திட்டங்களையும் பாலஸ்தீன மக்களுக்காக தொடங்க உள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
