சர்வதேச சந்தையில் நிலவி வரும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று திங்கட்கிழமை பெரும் சரிவைச் சந்தித்தது.
கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் போது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 95.84 முதல் 96.14 வரை பெரும் ஊசலாட்டத்தைக் கண்டு, இறுதியில் 95.97 என்ற சரிவுடன் நிலைபெற்றது. இந்நிலையில், இன்றைய வர்த்தகத் தொடக்கத்திலேயே அது மேலும் சரிந்து 96.20 ஆனது.
இன்றைய நாள் முழுவதும் ரூபாயின் மதிப்பு 95.85 முதல் 96.30 வரை ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கக்கூடும் என்று சந்தை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். தற்போதைய சூழலில் ரூபாயின் வீழ்ச்சியை 96.30 – 96.40 என்ற வரம்பிற்குள் கட்டுப்படுத்துவதற்கான உடனடி முட்டுக்கட்டைகள் (Resistance levels) உள்ளன. இதையும் தாண்டி ரூபாய் மதிப்பு சரிந்தால், அது மிக விரைவாக 96.50 என்ற நிலையை நோக்கித் தள்ளப்படலாம் எனவும் எச்சரிக்கின்றனர்.
சரிவிற்கான காரணங்கள்
ரூபாயின் இந்த அதிரடி வீழ்ச்சிக்கு சர்வதேசப் பிரச்சினைகளும், உள்நாட்டுச் சவால்களும் காரணமாகக் கூறப்பட்டாலும், இரண்டு முக்கியக் காரணிகள் சந்தையை உலுக்கி வருகின்றன.
இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) தங்களது நிதியைத் தொடர்ந்து திரும்பப் பெற்று வருகின்றனர். நடப்பு மே மாதத்தில் மட்டும் இதுவரை சுமார் ரூ.27,000 கோடி மதிப்பிலான முதலீடுகள் வெளியேறியுள்ளன. மேலும், இந்த 2026 ஆம் ஆண்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக ரூ.2.2 லட்சம் கோடி வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு முழுவதும் வெளியேறிய மொத்த முதலீடே ரூ.1.66 லட்சம் கோடிதான் எனும் போது, இந்த ஆண்டின் சில மாதங்களிலேயே அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது சந்தையின் பலவீனத்தைக் காட்டுகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பேரல் 111 டாலரைக் கடந்து வர்த்தகமாகி வருகிறது. இந்தியா தனது தேவையில் பெரும்பகுதி கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதால், இந்த விலை உயர்வு நாட்டின் இறக்குமதிச் செலவை பன்மடங்கு உயர்த்தியுள்ளது. இது நாட்டின் பணவீக்க அச்சத்தை அதிகரிப்பதுடன், டாலருக்கான தேவையை உயர்த்தி ரூபாயின் மதிப்பை நசுக்கியுள்ளது.
