விளையாட்டு உள்கட்டமைப்பில் புதியதொரு பாய்ச்சலுக்குத் தயாராகி வரும் கர்நாடக அரசு, இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்தைக் கட்டும் பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. பெங்களூருவின் புறநகர்ப் பகுதியான ஆனேக்கலில் அமையவுள்ள இந்த பிரம்மாண்ட மைதானத்திற்குப் பூமி பூஜை செய்யப்பட்டு, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அடிக்கல் நாட்டியுள்ளார்.
இந்த அதிநவீன புதிய மைதானத்தில் ஒரே நேரத்தில் 80,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டிகளைக் ரசிக்கும் வகையில் கேலரிகள் அமைக்கப்படவுள்ளன. கர்நாடக வீட்டுவசதி வாரியம் (KHB) தனது சொந்த நிதியிலிருந்து சுமார் ரூ.943 கோடி பட்ஜெட்டில் இந்த சர்வதேச மைதானத்தை உருவாக்கவுள்ளது. பெங்களூருவின் ஆனேக்கல் தாலுகாவில் உள்ள சூர்யாநகர் (இண்ட்லாவாடி கிராமம்) பகுதியில் இந்த விளையாட்டு வளாகம் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசு தரப்பில் வீட்டுமனைப் பிரிவுகள் மற்றும் விளையாட்டு கிராமத்திற்காக கையகப்படுத்தப்பட்டுள்ள ஒட்டுமொத்த 4,000 ஏக்கர் நிலப்பரப்பில், சுமார் 75 ஏக்கர் நிலம் இந்த பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானத்திற்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த புதிய மைதானம் கட்டி முடிக்கப்படும் பட்சத்தில், கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு நாட்டின் 2-வது பெரிய மைதானமாக இது உருவெடுக்கும்.
இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டேடியமான அகமதாபாத் ஸ்டேடியத்தில் ஒரே நேரத்தில் 1,32,000 பேர் அமரும் வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது பெங்களூரு நகரின் மையப்பகுதியில் உள்ள சின்னசாமி மைதானத்தில் சுமார் 35,000 பேர் மட்டுமே அமர முடியும் என்பதால், பெரிய தொடர்களை நடத்தும் நோக்கில் இந்த மாற்று ஏற்பாட்டை கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது. சர்வதேச தரத்திலான உள்கட்டமைப்புடன் அமையவிருக்கும் இந்த மைதானம், அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுலா மேம்பாட்டிற்கும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
