இந்திரா காந்தி ஆட்சியின் அவசரநிலை குறித்து திமுகவின் முரசொலி இதழ் மவுனம் காப்பதன் மூலம் காங்கிரஸ் தவறுகளை திமுக மறைக்கிறதா என நயினார் நாகேந்திரன் ஐயம் எழுப்பியுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஜனநாயகத்தின் பேரிடராக விளங்கிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட இந்நாளில், வீர முழக்கமிட்டு எழ வேண்டிய ‘முரசொலி’ நாளேடு, அதுகுறித்த செய்திகளோ அல்லது எந்தவொரு சிறப்புக் கட்டுரையோ இன்றி மௌனம் காப்பது வியப்பளிப்பதாகக் கூறியுள்ளார்.

நாட்டின் இருண்ட கால வரலாற்றையும், அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களையும் பேச மறுத்து, முரசொலி நாளிதழ் இன்று மௌனமாக இருப்பது ஏன்?

மக்களாட்சியின் மாண்பைக் காக்கத் தங்களை அர்ப்பணித்த தியாகிகளின் நினைவுகளை திமுக இவ்வளவு எளிதாகக் கடந்து போவது முறையா?

கூட்டணியிலிருந்து காங்கிரஸ் பிரிந்து சென்ற பின்னரும், இதுகுறித்து திமுக இன்னும் மௌனம் காப்பது ஏன்?

வரலாற்றின் கரும் பக்கங்களாக விளங்கும் காங்கிரஸின் தவறுகளை மறைக்க திமுக துணை போவதன் காரணம் என்ன? என அடுக்கடுக்காக வினா எழுப்பியுள்ள நயினார் நாகேந்திரன்,  

தியாகிகளின் குருதியால் எழுதப்பட்ட வரலாற்றை அலட்சியப்படுத்துவது தான் அவர்களுக்கு திமுக வழங்கும் மரியாதையா என்ற ஆதங்கம் எழுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய அலட்சியப்போக்கு அவசரநிலை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு, பல்வேறு இன்னல்களுக்கு ஆளான தியாகிகளின் அர்ப்பணிப்பைக் கொச்சைப்படுத்துவதாகவே அமைந்திருப்பதாகவும்,

மேலும், அவசரநிலையின்போது தாம் ‘மிசா’ சிறைக்கொடுமைகளை அஞ்சாது எதிர்கொண்டதாகத் தொடர்ந்து முழங்கி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வாதத்தை, இச்செயல் கேள்விக்குள்ளாக்கியுள்ளதோடு, அவரது சிறைவாசக் கூற்றுகளின் நம்பகத்தன்மையையே சிதைப்பதாகவும் அமைந்துள்ளது என்பதே உண்மை எனவும் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version