வரும் 2027 ஆம் ஆண்டு இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில், “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டை நடத்தும் நாடு என்ற முறையில், அனைத்து உறுப்பு நாடுகளின் அரசு தலைவர்கள் அல்லது பிரதமர்களுக்கு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுவது எங்களது கடமையாகும். அதன்படி அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு அனுப்பப்படும்” என்று உறுதிப்படுத்தினார்.
எனினும், கடந்த 2025 ஆம் ஆண்டு பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனால், இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமாபாத் செல்வாரா என்பது குறித்து இதுவரை எந்தத் தெளிவும் இல்லை.
இதனிடையே, மணிலாவில் நடைபெற்ற ஆசியான் (ASEAN) மாநாட்டின் போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தங்களது நாட்டு அமைச்சரைச் சந்திக்கக் கோரிக்கை விடுத்ததாக எழுப்பிய கேள்விக்கு, அது குறித்து தனக்கு தெரியாது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் பதிலளித்துள்ளது.
உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 25 சதவீதத்தைக் கொண்டுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO), இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற மாநாட்டிற்குப் பிறகு, இந்த ஆண்டிற்கான (2026) 25வது எஸ்சிஓ உச்சி மாநாடு ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
