தவெகவை பொறுத்தவரை ஆள்பிடிக்கும் நிலை இல்லை என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் வேறு கட்சியில் இருந்து வந்த ஒரே ஒருவருக்காக பெரிய விழா எடுத்து பெரிய சாதனை சரித்திரம் படைத்தது போன்று செய்துள்ளார்கள். எங்களைப் பொறுத்தவரை ஆள் பிடிக்கும் நிலை எங்களுக்கு இல்லை என்று தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழக தலைவரை நாடி மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும், பல்வேறு இயக்கங்களில் இருந்து வருவது என்பது வழக்கமான ஒன்றுதான் என்றும் கூறிய அவர் திமுக ஆட்சியில், ஆட்சி நடைபெறுகின்ற பொழுதே அனிதா ராதாகிருஷ்ணனை சேர்க்கவில்லையா என்று கேள்வி எழுப்பினார்.

திமுகவும் அதிமுகவும் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடிக்கலாம் என்று சதித்திட்டம் தீட்டியவர் யார் என்று மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார். இதுவரை தமிழக வரலாற்றில் அதிமுகவோடு திமுக இணைந்து ஒரு ஆட்சியை பிடிக்கலாம் என்று சதிவலை பின்னியது இதுவே முதல் முறை என்றும் அந்த பெருமையும் முதல்வர் விஜயால் தான் நடந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

டெல்லியில் முதல்வர் பிரதமரிடம் பேசியது  மு.க ஸ்டாலினுக்கு எப்படி தெரியும்? நம் முதல்வர் தமிழ்நாட்டிற்கு என்ன தேவையோ அதனை வாங்கி உள்ளார் என்று கூறினார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏறத்தாழ 5000 மெகாவாட் சோலார் எனர்ஜி மின்சாரம் தயாரித்தும் மத்திய அரசு மானியத்தை திமுகவால் பெற முடியவில்லை என்றும் அதற்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மிதுன் விவகாரம் குறித்தான கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி முன் வைப்பது சிறிய குற்றச்சாட்டுதான் எனவும், திமுகவுடன் அதிமுக இணைந்து ஆட்சி பிடிக்கலாம் என்று சதித்திட்டம் தீட்டியது யார் என்பதற்கு முதலில் பதில் கூற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

முதலீடுகள் வெளி மாநிலத்திற்கு செல்லக்கூடாது என்று அக்கறை எடுத்து அதற்கான நடவடிக்கைகளை கடந்த 5 ஆண்டுகளில் திமுக எடுத்திருக்க வேண்டும்,  தற்பொழுது இந்த மாநிலத்தில் எவ்வளவு தொழில்களை தொடங்கலாம்? அண்டை மாநிலத்தை காட்டிலும் நம் தமிழ்நாட்டில் எப்படி தொழிலை துவங்கலாம் என்று ஆராயப்பட்டு வருவதாகவும் கூறினார்.

வருவாய் துறையைப் பொறுத்தவரை தேவையான பணிகளை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காலிப்பணியிடங்களை நிரப்புவோம் என்றும் வருவாய்த் துறையில் பல்வேறு மாற்றங்களை மூன்று மாத காலத்தில் பார்க்க போகிறீர்கள் எனவும் தெரிவித்தார்.

3 மாத காலத்திற்குப் பிறகு ஒவ்வொரு துறையும் எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று முதல்வர் அறிவுரை வழங்கி உள்ளார் அதன்படி ஒவ்வொரு துறையும் சாதனை படைக்கும் என்றும் தெரிவித்தார்.

பெண்களை பாதுகாக்க என்ன படையை முதலமைச்சர் அறிவிக்கப் போகிறார் என்று நயினார் நாகேந்திரன் எழுப்பியுள்ள கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், அதனை நயினார் நாகேந்திரனிடம் தான் கேட்க வேண்டும். அவர் எப்படிப்பட்டவர் என்று தெரியும். அவருடைய இயக்கத்தை 11 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதத்திற்கு கொண்டு வந்து விட்டார் என்று விமர்சித்தார்.

தீர்ந்து போன கட்சிகளில் இருந்த நபர்களை தவெக இணைக்கிறது என்று மு. க ஸ்டாலின் பேசியது தொடர்பான கேள்விக்கு தீர்ந்து போன கட்சி யாருடையது? எந்தக் கட்சி தீர்ந்து போய்விட்டது என்று கூறுகிறார்? ஸ்டாலின்  மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் என்றார்.

அவர் இதுபோன்ற கருத்துக்களை கூறுவதை காட்டிலும் அமைதியாக இருந்து அவரது கட்சியை வலுப்படுத்துவதையும் மக்களின் செல்வாக்கை பெறுவதற்கும் வழிவகை செய்யலாம் என்றார்.

ஒரு இயக்கத்தின் தலைமை சுக்குநூறாக்கப்பட்டிருக்கிறது இளைய சமுதாயத்தில் உள்ளவர்கள் தமிழக வெற்றிக்கு கழக தலைவர் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள். எடப்பாடி பழனிசாமி தொகுதியில் எங்களுடைய சின்னம் இருந்திருந்தால் அவருடைய கதியும் இதுதான் என்று தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version