காங்கிரசுக்கு அடிமையாக இருந்ததில்லை, அதற்கான அவசியமும் இல்லை என கரூர் எம்.பி ஜோதிமணி திடீர் என சீற்றம் காட்டியிருக்கிறார்.
சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ஜோதிமணி எம்.பி, 2021 ல் திமுக ஆட்சிக்கு வந்த ஒரே வாரத்தில் ஒரு முக்கியப் பிரச்சினை தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் பிரச்சினையை முன்னிட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழல் உருவானது என்றும்,

அன்றிலிருந்து தொடங்கி சில நேரங்களில் ,சில விசயங்களில் அன்றைய கூட்டணி கட்சியான திமுக வோடு முரண்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. முரண்பட்டிருக்கிறேன். ஆதரிக்க வேண்டிய, பாராட்டப்பட வேண்டிய சூழலில் ஆதரித்திருக்கிறேன். பாராட்டியிருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

கூட்டணி என்பதற்காக எல்லாவற்றையும் ஆதரித்ததில்லை. எதிர்க்க வேண்டும் என்பதற்காக கண்மூடித்தனமாக எதிர்த்ததும் இல்லை. அதுதான் ஜனநாயகம் . கூட்டணி தர்மம். இந்தப் புரிதலோடுதான் கடந்த ஐந்து ஆண்டுகள் கழிந்தன. இப்பொழுதும் அப்படித்தான் இருக்க முடியும். அதுதான் எல்லோருக்கும் நல்லது எனவும்,

எந்தக் கட்சிக்கும், நான் முப்பதாண்டுகாலம் அர்ப்பணிப்போடு பயணித்துக் கொண்டிருக்கிற காங்கிரஸ் கட்சி உட்பட அடிமையாக இருந்ததில்லை. அதற்கான அவசியமும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு கலாச்சாரத்தை கட்சிக்குள் எதிர்பார்க்காதது காங்கிரஸ் தலைமையின் ஆகச் சிறந்த சிறப்புகளில் ஒன்று எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், த.வெ.க என்கிற ஒரு கட்சி உருவாவதற்கு முன்பு இந்த திடீர் தி.மு.க எதிர்ப்பாளர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று வரலாறு சொல்லும். காமராஜருக்காகக் கூட வாய்திறக்காமல் அவ்வளவு ப(வ்)யம்! இன்னும் நிறையச் சொல்லலாம். கண்ணியம் கருதித் தவிர்க்கிறேன். மேலும் நாம் எதிர்க்க வேண்டியது பாஜகவை. சக கட்சிக்காரர்களை அல்ல எனக் கூறியிருக்கிறார். இதனால் யாரைச் சாடுகிறார் என வினா எழுந்துள்ளது.

அதேபோல், காங்கிரஸ் கட்சி எந்தக் கூட்டணியில் இருந்தாலும் ஆதரிக்க வேண்டிய விசயங்களை ஆதரிப்பதும், எதிர்க்க வேண்டிய விசயங்களை எதிர்ப்பதும்,கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதும் தான் ஒரு உண்மையான காங்கிரஸ் தொண்டரின் கடமை எனப் பதிவிட்டுள்ள ஜோதிமணி எம்.பி,

அப்பொழுதுதான் காங்கிரஸ் கட்சியின் தனித்தன்மையையும், மதிப்பையும் நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். அதிகாரத்திற்கு நெருக்கமாகக் காட்டிக் கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ள முடியாது. செய்யவும் மாட்டேன் என உறுதி காட்டியிருக்கிறார்.

அதே போல யாரிடமிருந்தும் எனது நம்பகத்தன்மைக்கு எந்த சான்றிதழும் தேவையில்லை. “போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து செல்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version