முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக பேனா சின்னம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு தொடருமா அல்லது கை விடுமா என தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் நினைவாக மெரினா கடற்கரையில் பேனா வடிவிலான நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டம் குறித்து தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தத் திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து முன்னெடுக்கப் போகிறதா அல்லது கைவிடப் போகிறதா என்பதை வரும் ஜூலை 28-ம் தேதிக்குள் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கருணாநிதியின் இலக்கியப் பங்களிப்பை நினைவூட்டும் வகையில் 80 கோடி ரூபாய் மதிப்பில் 8,000 சதுர மீட்டர் பரப்பளவில், 30 மீட்டர் உயரமுள்ள பேனா வடிவ நினைவுச் சின்னம் கட்டுவதற்கான திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதற்காக கடற்கரையில் 290 மீட்டர் தரைப்பகுதியிலும், கடலுக்குள் 360 மீட்டர் நீளத்துக்கு பாலம் அமைக்கும் பணிகளும் திட்டமிடப்பட்டன. கருணாநிதியின் தமிழ் இலக்கியம், அரசியல் மற்றும் சமூகப் பங்களிப்புகளை அடையாளப்படுத்தும் வகையில் இந்தச் சின்னம் வடிவமைக்கப்படும் என அப்போது கூறப்பட்டது. எனினும், இந்தத் திட்டம் ஆமைகள் முட்டையிடும் கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்துக்குள் அமைவதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.
வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் வெண்ணிலா தாயுமானவன் உள்ளிட்டோர் தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்தனர். நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா மற்றும் நிபுணர் குழு உறுப்பினர் பிரசாந்த் கர்கவா ஆகியோர், “மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்தக் கட்டுமானப் பணியும் தொடங்கப்படவில்லை. அரசு இந்தத் திட்டத்தை முன்னெடுக்க விரும்புகிறதா அல்லது கைவிடுகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என்று கண்டிப்புடன் உத்தரவிட்டனர்.
தீர்ப்பாயம் நினைவுச் சின்னங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், ஆனால் கடலுக்குள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கடல்வாழ் உயிரினங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் சுட்டிக்காட்டியது. திட்டத்தை கைவிட்டால் வழக்கை முடித்து வைக்கலாம் எனவும் தெரிவித்தது. மெரினா கடற்கரை ஒலிவ் ரிட்லி ஆமைகளின் முக்கிய முட்டையிடும் இடங்களில் ஒன்று என்பதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் இத்திட்டத்துக்கு தொடக்கத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
திட்டம் அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லாதது பலரிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் வகையில் ஏதேனும் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்பதில் பெரும்பாலானோர் உடன்பாடு தெரிவிக்கும் நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் அவசியம் என்பதால் அரசு சமநிலையான முடிவை எடுக்க வேண்டும் என அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன. ஜூலை 28-ம் தேதிக்குள் அரசு அளிக்கும் பதில் இந்த வழக்கின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
