மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்தில் உள்ள கிள்ளியூர் ஊராட்சியில் 500 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெற்பயிர்கள் வளர்ந்து வரும் நிலையில் காவிரிநீர் இல்லாமலும், மழை பெய்யாததாலும் குறுவை சாகுபடி முற்றிலும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நிலத்தடி நீர் உப்புநீராக உள்ளதால் சுமார் 200 ஏக்கருக்கு மேல் ஒரு மாத கால பயிர்கள் பாதிக்கப்பட்டு தற்பொழுது வேர்கள் அழுகியும் நெற்பயிர்கள் கருகியும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதேபோன்று மாத்தூர், நல்லுச்சேரி, கீழ்மாத்தூர் ஆக்கூர் உட்பட பல இடங்களில் குருவை சாகுபடி செய்த நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி உள்ளதாக கூறும் விவசாயிகள் வேளாண்மை துறையினர் பார்வையிட்டு ஆலோசனை வழங்கவும், உடனடியாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
