சொத்து தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை வெட்டிக்கொலை செய்த கொடூர சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் சடச்சனா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவிந்தாப்புரா கிராமத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த சொத்துப் பிரச்சினை இரத்தக்களரியில் முடிந்துள்ளது. அதே கிராமத்தைச் சேர்ந்த அப்பு கவுடா மற்றும் ரேவணசித்தப்பா ஆகிய இரு குடும்பங்களுக்கும் இடையே சுமார் 10 ஏக்கர் நிலத்துக்காக பல ஆண்டுகளாக கடும் மோதல் நீடித்து வந்தது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் ஊர் பெரியவர்கள் ஏற்பாடு செய்த பஞ்சாயத்தில் பங்கேற்க இரு தரப்பினரும் நேற்று முன்தினம் கிராமத்துக்கு வந்தனர்.

பஞ்சாயத்தில் பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில், அப்பு கவுடா தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை ரேவணசித்தப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் ஏற்க மறுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் படிப்படியாக கைகலப்பாக மாறியது. இந்தச் சமயத்தில் அப்பு கவுடா மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி தயாராக வைத்திருந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதலைத் தொடங்கினர்.

அரிவாள்கள், கத்திகள் மற்றும் துப்பாக்கிகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தக் கொடூரத் தாக்குதலில் ரேவணசித்தப்பா தரப்பைச் சேர்ந்தவர்கள் பலியாகினர். கொல்லப்பட்டவர்களில் துண்டப்பா (65), சிவபுத்ரா (58), சந்திரகாந்த் (55), சிவபுத்ராவின் மகன்கள் ராகுல் (25), சமர்த் (23) ஆகியோர் அடங்குவர். மேலும் அவர்களது தோட்ட வேலைக்காரரான சபீர் பாபுசாப் (45) என மொத்தம் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாக்குதலில் இருந்து தப்ப முயன்ற அரவிந்த் யஷ்வந்த் (72) மற்றும் சந்தீப் பாரத் மானே (33) ஆகிய இருவரும் அரிவாள் வெட்டு மற்றும் துப்பாக்கிக் குண்டுகளால் படுகாயமடைந்தனர்.

அவர்கள் தற்போது விஜயாப்புரா மாவட்ட அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்துக்குப் பிறகு அப்பு கவுடா மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து சடச்சனா போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அப்பு கவுடா தரப்பைச் சேர்ந்த சசிகாந்த், பிரசாந்த், ரமேஷ், சங்கப்பா, மகாதேவா ஆகிய ஐந்து பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கிராமத்தில் இன்னும் பதற்றம் நிலவுவதால் பாதுகாப்புக்காக போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகால சொத்து விவகாரம் இவ்வளவு பயங்கரமான வன்முறையில் முடிவடைந்தது கிராம மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version