இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை 99 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். டெல்லி ஐஐடி-யில் நடைபெற்ற ‘அமெரிக்கா – இந்தியா டிரஸ்ட் முன்முயற்சி’ (US-India Trust Initiative) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் இறுதி கட்டப் பணிகளை முடிப்பதற்காக, கடந்த வாரம் இந்தியக் குழுவினர் வாஷிங்டன் சென்றிருந்தனர். அதன் தொடர்ச்சியாக, மீதமுள்ள 1 சதவீதப் பேச்சுவார்த்தையை முழுமையாக முடித்து ஒப்பந்தத்தை இறுதி செய்ய, அடுத்த வாரம் அமெரிக்க உயர் மட்டக் குழு இந்தியா வரவுள்ளது.

அடுத்த சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தாகும் என்று எதிர்பார்ப்பதாகத் தூதர் செர்ஜியோ கோர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் எனக் கூறிய அவர், குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு, செமிகண்டெக்டர், குவாண்டம் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பத் துறைகளில் இருதரப்பு உறவு மேலும் வலுவடையும் எனத் தெரிவித்தார்.

“அதிநவீன மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் உலகளாவிய அதிகார சமநிலையை மாற்றி அமைத்து வருகின்றன. இந்த மாற்றத்தை முன்னின்று நடத்துவதற்கு இந்தியா – அமெரிக்கா கூட்டணியை விடச் சிறந்த கூட்டணி எதுவும் இருக்க முடியாது” என்று செர்ஜியோ கோர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு தசாப்தங்களில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தகம் 20 பில்லியன் டாலரிலிருந்து 220 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. டொனால்ட் டிரம்ப் தலைமையிலான தற்போதைய அமெரிக்க அரசு, இந்தியாவை உலகளாவிய முதன்மைப் பங்காளியாகக் கருதுவதாகவும், அமெரிக்க நிறுவனங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இந்த ஒப்பந்தம் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version