தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். மருத்துவ சிகிச்சை பெறு வந்த பாரதிராஜா சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நள்ளிரவு 2 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 84. அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தும் நேரில் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.
அந்தவகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜா அவர்களால் கிராமங்களுக்குள் நுழைந்தன. கிராமத்து மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் திரைக்குக் கொண்டு வந்து, தமிழ்ச்சினிமாவை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றார்.
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட அவரது படைப்புகளைத் தமிழ்ச்சினிமாவின் வரலாற்றை எழுதும் எவர் ஒருவரும் தவிர்க்க முடியாது. தனது படைப்பாற்றலின் வழியாகப் பிற மொழிகளிலும் படங்களை இயக்கி, அங்கும் தன் முத்திரையைப் பதித்த அவரை இந்தியத் திரை வரலாறு என்றைக்கும் உச்சத்தில் வைத்து நினைவுகூரும்!
தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தவர். தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் பற்றுகொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் பாரதிராஜா அவர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு.
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா – ‘இசைஞானி’ இளையராஜா – ‘கவிப்பேரரசு’ வைரமுத்து ஆகியோரது கூட்டணியில் உருவான பாடல்கள் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டும், ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்துக்கொண்டும்தான் இருக்கின்றன.
அவரது உடல்நலன் குறித்து விசாரிக்கவும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவும் பாரதிராஜா அவர்களைச் சந்தித்து உரையாடிய தருணங்களைத் தற்போது நினைக்கையில் நெஞ்சம் மேலும் பாரமடைகிறது.
பாரதிராஜா அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், பாரதிராஜாவின் மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அல்லிநகரத்தில் பிறந்து, அழியாத படைப்புகளைக் கொடுத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள், சினிமா ரசிகர்களின் மனங்களில் – தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார்! என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது இரங்கல் குறிப்பில், மண்ணின் மணத்தையும், மக்களின் உணர்வுகளையும் உலக திரையில் பதித்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. கிராமிய வாழ்க்கையை கலையாக மாற்றி, தமிழ் சினிமாவிற்கு புதிய மொழியையும் முகவரியையும் தந்த மகத்தான படைப்பாளி அவர். அவரது ாக்கிய கலை மரபும் தலைமுறைகள் கடந்தும் வாழும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்
இதேபோல், கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில், ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பெரும்பான்மையினரின் யதார்த்தவாத குரல்களை திரையில் பதிவு செய்த அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினர், திரையுலகினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவுக்குத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில்,இயக்குனர் இமயம் என்று போற்றப்பட்ட பன்முகம் கொண்ட திரைக்கலைஞர் பாரதிராஜா முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
தமிழ்த் திரையுலக வரலாற்றை பாரதிராஜா அவர்களை தவிர்த்து விட்டு எழுத முடியாது என்று கூறும் அளவுக்கு அவர் படைத்த புதுமைகளும், சாதனைகளும் ஏராளமானவை. தேனி அல்லிநகரத்திலிருந்து திரைத்துறை குறித்த ஏராளமான கனவுகளுடன் வந்த பாரதிராஜா அவை அனைத்தையும் நனவாக்கினார். நீரோட்டத்துடன் பயணித்தால் தான் வெற்றி எளிது என்ற இலக்கணத்தைத் தகர்த்த பாரதிராஜா, படப்பிடிப்பு தளங்களில் மட்டுமே அடங்கிக் கிடந்த திரைப்பட உருவாக்கத்திற்கு விடுதலை கொடுத்து, கிராமங்களுக்கு கொண்டு சென்றார்; நாயகனும், நாயகியும் அழகாக இருக்க வேண்டும் என்ற வழக்கத்தை உடைத்து மிகச் சாதாரணமானவர்களையும் நாயக, நாயகிகளாக்கி புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றவர் பாரதிராஜா.
தேசிய அளவிலும், மாநில அளவிலும் வழங்கப்பட்ட பெரும்பன்மையான விருதுகளை வாங்கிக் குவித்தவர் அவர். அவரது முதல் படைப்பின் பொன்விழா ஆண்டு கொண்டாடப்படவிருந்த நிலையில், அவர் நம்மை விட்டு பிரிந்திருப்பது திரையுலகுக்கு பெரும் இழப்பாகும். கடந்த 2&ஆம் தேதி மாலை பாரதிராஜா அவர்களை, இயக்குனர் தங்கர் பச்சானுடன் சென்று அவரது நீலாங்கரை இல்லத்தில் சந்தித்து உரையாடினேன். எனது நலம் விசாரித்த அவர், பொதுவான விஷயங்கள் குறித்து என்னுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் தென்பட்ட தன்னம்பிக்கை, ஆர்வம் ஆகியவற்றைப் பார்த்த நான் விரைவில் அவர் முழுமையாக நலம் பெறுவார்; இயல்பான பணிகளுக்கு திரும்புவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், இன்று காலை கிடைத்த அவரது மறைவுச் செய்தியை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. திரையுலகில் தமக்கென தனி வம்சத்தை உருவாக்கி வைத்திருப்பவர் அவர். தமிழ்த் திரையுலகம் வாழும் வரை இந்த மாபெரும் திரைக்கலைஞர் போற்றப்படுவார்.
இயக்குனர் பாரதிராஜா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வைகோ தனது இரங்கல் குறிப்பில்,
திரை உலகின் ஈடிலா பேரொளி அணைந்துவிட்டது. ஆனால், அந்த ஒளி வெள்ளத்தின் பிரகாசம் இருளையும், இரவுகளையும் கடந்து இன்னும் பன்னூறு ஆண்டுகளுக்கு ஜொலித்துக் கொண்டே இருக்கும்.
தென்பாண்டி மண்டலத்தின் உயிர் நாதமான கிராமங்களை வெட்டரிவாளும், வேலும் தாங்கிய வீர தமிழ்க் குலத்தின் மகத்தான மாண்பினை தலை கவிழாத தன்மானத்தை, ஓடும் சிற்றாறுகளின் சல சலப்பை பண்டுதொட்டு திகழ்ந்த தமிழனின் கலாச்சாரத்தை இமயத்தின் உச்சியில் நட்டு வைத்த கலை உலகின் முடிசூடா வேந்தன், நான் உயிராக நேசித்த பாரதிராஜா எனும் உன்னதப் படைப்பாளி ஐயோ போய்விட்டாரே! அந்த இடத்தை நிரப்புவதற்கு எக்காலத்திலும் எவராலும் இயலாது!
16 வயதினிலே என்ற திரைப்படம் வாலிப நெஞ்சங்களை காதல் எனும் மயிலிறகால் வருடியது.
அத்திரைப்படம் முடியும்போது கண்கள் கோர்த்த நீருடன் கனத்துப் போன இதயத்துடன் கொட்டகையை விட்டு வெளியேறினோம்.
கிழக்கே போகும் ரயிலில், காதல் உலகத்தை வலம் வந்தோம். புதிய வார்ப்புக்களில் நெஞ்சம் சிலிர்த்தோம். மண் வாசனையில் அரிவாளின் கூர்மையைத் தடவிப் பார்த்தோம். சிகப்பு ரோஜாக்களில் மர்ம பட மன்னன் ஹிட்ச்காக்கின் ஆளுமையை மீறல் கண்டோம்.
உலகிலேயே ஈடிலா நடிப்புலகின் விரிவானம் சிவாஜி கணேசனை மறு உயிர்ப்பாக முதல் மரியாதையாக சந்தித்தோம்.
பட்டிக்காடுகள் வெள்ளித் திரையில் பட்டணப் பிரவேசம் செய்வதைக் கண்டு பூரித்தோம்.
கடலோர கவிதைகளின் காதல் உணர்வில் உருகிப் போனோம். புதுமைப் பெண் படைப்பில் தமிழ்ப் பெண் புதுமை கண்ணகியாக சீறி எழுந்ததைக் கண்டு வியந்தோம்.
தமிழ்த் திரை உலகத்தின் போக்கை தலைகீழாகப் புரட்டிப் போட்ட புதிய கலை உலகை தரிசித்தோம்.
கைரேகை சட்டத்தால் வெள்ளையர் ஆட்சியில் கொடுமை சங்கிலிகளால் பூட்டப்பட்ட பிரமலைக் கள்ளர் சமூகம் கலை உலக பிரம்மாவை தமிழனுக்குத் தந்தது. என் உயிரினும் இனிய தமிழ் மக்களே! என்ற காந்தக் குரல் ஓசையை பாரதிராஜாவின் திரைப்படத்தின் முதல் நிமிடத்திலேயே செவிகளில் கேட்டு சிலிர்ப்படைந்தோம்!
அக்காவிய நாயகன் மேனியால் மறைந்தாலும், தன் படைப்புக்களால் காலனை வென்றுவிட்டான்; மரணத்தையும் சாய்த்துவிட்டான்! எனினும் நம்மை விட்டு அவர் பிரிந்தார் என நினைக்கையில் கண்கள் குளமாகின்றன! நெஞ்சம் துடிக்கிறது. காவிய நாயகனே! கலை உலகத்தின் கோகினூர் வைரமே! உன்னை எண்ணி இதயம் வெம்முகிறது, நெஞ்சம் கலங்குகிறது.
எந்த மலர்களால் நீ உன் காவியத் தலைவன் தலைவியை போற்றி எங்களை பூரிக்கச் செய்தாயோ அதே பூக்களை உன் மேனியில் தூவி புகழ் வணக்கம் செலுத்துகிறோம்!
என் பாரதிராஜாவே, கலை உலகின் உயிர்க் காவியமே உன் கீர்த்தி, காலங்களை வென்று ஒளிர்ந்துகொண்டே இருக்கும்! உன் புகழை உச்சரித்தால் எங்கள் உதடுகள் உயிர்க்கின்றன!
நின் பெயர் வாழிய! காலத்தை வென்று வாழிய!
உன் பரம ரசிகனின் நெஞ்சம் வடித்த இரங்கல் வணக்கம்! என்று குறிப்பிட்டுள்ளார்.
கிராமத்துப் பின்னணி கொண்ட கதைகளாலும், நடிகர், நடிகைகளின் கதாபாத்திர வடிவமைப்பாலும், இன்னபிற கலைஞர்களுக்கு முன்னோடியாகவும் சுமார் அரை நூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய அற்புதமான கலைஞர் திரு.பாரதிராஜா அவர்களின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகிற்கும் பேரிழப்பாகும்.
நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக என பல்வேறு நிலைகளிலும் தமிழ் சினிமாவையே தன் உயிர்மூச்சாகக் கொண்டிருந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இரங்கல் குறிப்பில், திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அவர்கள் இன்று தனது 84-வது வயதில் காலமாகி விட்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் 1972 ஆம் ஆண்டு “16 வயதினிலே” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பல திரைப்படங்களை இயக்கி, தனது கலைத்திறமையால் தமிழ் சினிமாவில் தனக்கென்று முத்திரை ல் துயருறும் அவரது குடும்பத்தாருக்கும் ரசிகப் பெருமக்களுக்கும் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தனது இரங்கல் குறிப்பில், பிரபல ஜாம்பவான் திரைப்பட இயக்குநரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ஸ்ரீ பாரதிராஜா அவர்களின் மறைவுச் செய்தி இந்தியத் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
தமது அற்புதம் வாய்ந்த திரைப்படங்களின் மூலம் தமிழ் திரையுலகிற்கு மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழி ரசிகர்களின் இதயங்களையும் வென்றெடுத்த மிகச்சிறந்த இயக்குனர் அவர். 6 தேசிய விருதுகளைப் பெற்று இந்தியத் திரைப்படத் துறையில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவர்.
அண்ணன் மெகாஸ்டார் @KChiruTweets அவர்களுடன் அவர் இயக்கிய ‘ஆராதனா’ திரைப்படமும், அதேபோல் தேசிய விருது பெற்ற ‘சீதாகோகசிலுகா’ (சீதாக்கோகச்சிலுகா) போன்ற திரைப்படங்களும் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளன. கிராமத்து வாழ்வியலையும், மனித உறவுகளையும் திரையில் அற்புதமாகப் படைத்துக் காட்டிய இயக்குநராக பாரதிராஜா அவர்கள் என்றும் நினைவுகூரப்படுவார்.
அத்தகைய சிறந்த படைப்பாற்றல் மிக்க இயக்குநரை இழப்பது இந்தியத் திரையுலகிற்குப் பேரிழப்பாகும். ஸ்ரீ பாரதிராஜா அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோல், வி.கே.சசிகலா தனது இரங்கல் குறிப்பில், இயக்குநர் இமயம் அன்பு சகோதரர் திரு.பாரதிராஜா அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அரை நூற்றாண்டாக தமிழ் சினிமா உலகில் தனித்துவத்தோடு பணியாற்றியவர். பத்மஶ்ரீ விருது, கலைமாமணி விருது, மூன்று முறை தமிழ் மாநில விருது மற்றும் ஆறு தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரரான திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு தமிழ் திரையுலகிற்கு யாராலும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர் திரு.பாரதிராஜா அவர்கள். எனது நலனுக்காக பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதையும் இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன். அன்பு சகோதரர், நம் பாசத்துக்குரிய திரு. பாரதிராஜா அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் திரை உலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.


