தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளை அரசு திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 6 லட்சம் நெல் மூட்டைகளில், எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தீயில் கருகிச் சேதமடைந்துள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.3.50 கோடி இருக்கும் என முதற்கட்டமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், ஆலங்குளம், தென்காசி மற்றும் சுரண்டை பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இருப்பினும், தீயின் வேகம் காரணமாக, இரவு முழுவதும் போராடியும் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. தற்போது, எஞ்சியிருக்கும் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும், மூட்டைகளின் உட்பகுதியிலிருந்து இன்னும் புகை வெளியேறி வருவதால், மீண்டும் தீ விபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் தொடர்ந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தீ விபத்து இயற்கையாக நடந்ததா அல்லது சமூக விரோதிகளின் செயலா என்பது குறித்து கடையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திறந்தவெளி கிடங்கில் பாதுகாப்பு குறைபாடு இருந்ததா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். முறையான விசாரணைக்குப் பின்னரே தீ விபத்துக்கான உண்மையான காரணம் வெளிவரும் எனத் தெரிகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
