தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து 4 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக, தேர்தல் முடிவுகளுக்குப் பின் பெரும் அரசியல் சிக்கலில் சிக்கியுள்ளது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இரு எம்எல்ஏக்களின் வெற்றி, கட்சியை சட்டரீதியான சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ள நிலையில், அவர்கள் பதவி ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு திமுக கூட்டணியில் நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் மதிமுகவின் சொந்த சின்னத்திலும் போட்டியிட்டது. சீர்காழி தொகுதியில் செந்தில் செல்வனும், கடையநல்லூர் தொகுதியில் டி.எம். ராஜேந்திரனும் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றனர். கடையநல்லூரில் அதிமுகவின் கிருஷ்ணாமுரளியை 6,253 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து ராஜேந்திரன் வெற்றி பெற்றார். மொடக்குறிச்சி மற்றும் மதுரை தெற்கு தொகுதிகளில் மதிமுக வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவினர்.
உதயசூரியன் சின்னத்தில் வென்ற இரு எம்எல்ஏக்களும் சட்டப்படி திமுகவைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுவதால், தவெக (தமிழக வெற்றி கழகம்) அரசுக்கு ஆதரவு அளிக்கவும், திமுகவிலிருந்து விலகவும் முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்த அவல நிலையைத் தீர்க்கும் வகையில் சீர்காழி செந்தில் செல்வன் மற்றும் கடையநல்லூர் ராஜேந்திரன் ஆகியோர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, திமுக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என மதிமுக நிர்வாகிகள் பொதுச் செயலாளர் வைகோவிடம் தீவிர அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் விஜய் திருச்சி வந்தபோது, மதிமுக எம்பி துரை வைகோ அவரை விமான நிலையத்தில் வரவேற்றார். அமைச்சர்கள் உள்ளிட்ட திமுக தலைவர்கள் உடன் இருந்தனர். வரவேற்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, “துரதிருஷ்டவசமாக திமுக சின்னத்தில் போட்டியிட்டோம். இனி நாங்கள் தனி இயக்கம். உதயசூரியன் சின்னத்தில் நின்றதால் தவெகவுக்கு ஆதரவு தர முடியவில்லை. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி வராமல் தடுக்க இடதுசாரி கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்தது சரியான முடிவு. தமிழ்நாடு மக்கள் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை அளிக்காவிட்டாலும், தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும். அரசு சிறப்பாகச் செயல்படும் என நம்பி ஒரு ஆண்டு கால அவகாசம் அளிக்க வேண்டும். தவறு நடந்தால் வெளியில் இருக்கும் நாங்கள் உள்ளிட்டோர் கண்டிக்கலாம்” என்றார்.
மதிமுகவின் எதிர்கால அரசியல் பாதையைத் தீர்மானிக்க ஜூன் 27 அன்று பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் திமுக கூட்டணியில் தொடர்வது குறித்து நிர்வாகிகளின் கருத்துகளின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று துரை வைகோ தெரிவித்தார். “இது தனிப்பட்ட முடிவல்ல, ஜனநாயக கட்சியான மதிமுகவின் கூட்டு முடிவு” என அவர் வலியுறுத்தினார்.
