தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், மேகதாது அணை திட்டம் மற்றும் காவிரி டெல்டாவில் குருவை சாகுபடி பாதிப்பு தொடர்பான முக்கிய விவகாரங்கள் மீண்டும் விவாதத்துக்கு வந்தன. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல உறுப்பினர்கள் இதுதொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானங்களை தாக்கல் செய்தனர். சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவற்றை ஏற்றுக்கொண்டதை அடுத்து, விவாதம் தீவிரமடைந்தது.

விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது உரையில் சில தவறான தகவல்களை அளித்ததாக குற்றம்சாட்டினார். பிரதமருக்கு ஒரு முறை மட்டுமே கடிதம் எழுதப்பட்டதாக உதயநிதி குறிப்பிட்டதை எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் இரண்டு முறை என்று சுட்டிக்காட்டியதால், அவர் உடனடியாக திருத்திக்கொண்டதாக ஆதவ் தெரிவித்தார்.

மேலும், டெல்டா விவசாயிகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்த அவர், இன்று மதியம் டெல்டா விவசாய சங்கப் பிரதிநிதிகள் முதலில் மூத்த அமைச்சர்களை சந்தித்து, பின்னர் மூன்று முப்பது மணிக்கு முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்த அறிவுறுத்தல் கடந்த வாரமே வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

ஆதவ் அர்ஜுனா மேலும், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் மேகதாது திட்ட அறிக்கைக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் மூன்று முறை தள்ளுபடி செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டினார். கர்நாடக அரசு தயாரித்த விரிவான திட்ட அறிக்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த டிசம்பரில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சீராய்வு மனுவும் ஏப்ரலில் நிராகரிக்கப்பட்டது.

மறுசீராய்வு மனுவிலும் தரப்பு வாதங்கள் போதுமான அளவு வலுவாக முன்வைக்கப்படாததால் தலைமை நீதிபதி அமர்வு அதையும் தள்ளுபடி செய்ததாக அவர் குறிப்பிட்டார். “நாங்கள் இப்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம். அவர்கள் ஏன் மூன்று முறை தோல்வியடைந்தார்கள் என்பதற்கான விளக்கத்தை எதிர்க்கட்சித் தலைவர் அளிக்க வேண்டும்” என அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.என். நேரு, மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும், நீதிமன்றம் அவகாசம் எடுத்துக்கொண்டு வரச் சொன்னதுதான் என்றும் தெரிவித்தார். அமைச்சர்கள் முதலமைச்சரை புகழ்வது இயல்பானது எனக் குறிப்பிட்ட அவர், சண்டை வளர்ப்பதைத் தவிர்த்து நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேகதாது விவகாரத்தில் ஒற்றுமையைப் பேசும்போது வேறுபாடுகளை முன்வைப்பது சரியல்ல என்றும், தலைவர் ஸ்டாலின் இப்பிரச்சினையில் எப்போதும் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது வரலாறு என்றும் அவர் கூறினார். இந்த விவாதம் காவிரி உரிமைகள் மற்றும் டெல்டா விவசாயிகளின் நலன் தொடர்பான அரசியல் கட்சிகளுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version