மேகதாது விவகாரத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையால் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எந்த வகையிலும் பாதிக்காது என திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த  தங்கம் தென்னரசு, ”மேகதாது விவகாரம் குறித்து அதிமுகவினர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மேகதாது விவகாரத்தில் திமுக சில திருத்தங்களை கூறியது. அதன்பின் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டெல்டா மக்களுக்காக இந்த திருத்தம் மிகவும் அவசியமானது” என்றார்.

மேகதாதுவில் அணை கட்ட கூடாது எனப் பல முறை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும், அனைத்து கட்சி கூட்டங்களிலும் நமது எதிர்ப்பை நாம் தெரிவித்து உள்ளதாகவும் கூறிய அவர், ஆனால் பிடிவாதமாக அணையை கட்டுவோம் என கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதனை கவனமாக கையாள வேண்டும் என்றும், இல்லையென்றால் அவர்கள் பெரிய நடவடிக்கை எடுத்துவிடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

அதேபோல் மேகதாது விவகாரம் என்பது உச்சநீதிமன்றதில் கூட முடிவுக்கு கொண்டு வர முடியாத ஒரு பிரச்சனையாக உள்ளது என்ற அவர், மூத்த வல்லுநர்கள் ஆலோசனையின் பேரிலேயே புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளோம் என்றும், இந்த கோரிக்கையால் உச்சநீதிமன்றம் காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை எந்த வகையிலும் பாதிக்காது என்று தெரிவித்தார்.

அதுமட்டுமன்றி, நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பது நல்ல முடிவு தான். கருத்து வேறுபாடுகளைத் தாண்டி, திமுக தெரிவித்த கருத்தை முதல்வர் ஏற்று, முன்மொழிந்து தீர்மானம் நிறைவேறி உள்ளது.பெண்ணையாறு குறுக்கே அணை கட்ட கூடாது என்று கோரிக்கை வைத்த போது, உச்சநீதிமன்றம் நடுவர் மன்றம் அமைக்கலாம் என்று கூறி உள்ளது.  இந்நிலையில் டெல்டா மக்கள் நலனை பாதுகாக்க வேண்டும் என்கிற வகையில் நடுவர் மன்றம் கேட்பது ஒரு முயற்சியே.மக்களை பாதிக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் நாம் அனுமதிக்க கூடாது.பேரவையில் மேகதாது தீர்மானம் திருத்தம் கொண்டுவரும் போது, யாரும் கருத்து கூறவில்லை.அனைத்து கட்சிகளும் ஓர் அணியாக இருந்து டெல்டா மக்களை பாதுகாக்க வேண்டும் எனக் கேட்டுகொண்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version