திமுகவின் கீழ்த்தரமான எண்ணத்தை தவெக பிரதிபலிப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பதிவில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தொடர்பான கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் தவெக அரசின் அணுகுமுறையை கடுமையாகச் சாடியுள்ளார். முதலமைச்சர் ஜோசப் விஜய் ஒரு ‘பொம்மை’ மட்டுமே எனும் விமர்சனத்துடன் தொடங்கிய அவர், அமைச்சர்களின் நிலைப்பாடு இந்து பக்தர்களுக்கு எதிரானது என்று குற்றம் சாட்டினார்.
மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள பழமையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என மதுரை நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை உறுதி செய்துள்ள நிலையில், தவெக அரசின் அமைச்சர்கள் அதை நிறைவேற்ற மறுப்பு தெரிவித்துள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான சி.டி.ஆர். நிர்மல்குமார், “ஐகோர்ட் உத்தரவிட்டாலும் தீபத்தூணில் தீபம் ஏற்ற மாட்டோம்” என முஷ்டி காட்டியதாகக் கூறப்படுகிறது. மற்றொரு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் இதை ஆதரித்து, “தீபத்தூணை இருளிலேயே வைத்திருப்பதே அரசின் நிலைப்பாடு” எனக் கூறியுள்ளார்.
நயினார் நாகேந்திரன் தனது பதிவில், “முருகபக்தர்களுக்கு எதிராக தவெகவின் வாலும் காலும் சலங்கை கட்டி ஆடுகின்றன. தலைமை என்று சொல்லிக் கொள்ளும் முதலமைச்சர் விஜய் இதுபற்றி ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், “தமிழகத்திற்கு உண்மையில் யார் முதலமைச்சர்?” எனும் கேள்வியையும் முன்வைத்தார். இந்த விவகாரம் பல ஆண்டுகளாக நீடித்து வரும் ஒன்று. மதுரை மேல் நீதிமன்றம் தீபத் தூண் தேவஸ்தானம் நிலத்தில் இருப்பதாகவும், பாரம்பரிய உரிமையை மதிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும், அரசு அமைதி காரணங்களைச் சுட்டிக்காட்டி மறுப்பு தெரிவிக்கிறது. இது இந்துக்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பது போன்றது என பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
நயினார் நாகேந்திரன் மேலும் கூறியுள்ளதாவது: “ஐகோர்ட் தீர்ப்பை மதிக்காமல், ஒரு சாராருக்கு சாதகமாகவும் இந்துக்களுக்கு எதிராகவும் அமைச்சர்கள் வாய் வார்த்தைகளால் விளையாடுவதை வேடிக்கை பார்ப்பதற்கா மக்கள் இந்த அரசை தேர்ந்தெடுத்தார்கள்? தேர்தலுக்கு முன் அமைதி காத்து, ஆட்சியமைத்த பிறகு முருகபக்தர்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்துவது தவெகவின் மதநல்லிணக்க அரசியலா?” என்றார். திமுகவின் சிறுபான்மையினருக்கு சாதகமான அரசியலைப் போலவே தவெகவும் செயல்படுவதாகவும், இது இந்துக்களின் முதுகில் சவாரி செய்யும் “துரோகசக்தி” என்றும் அவர் விமர்சித்தார்.
“தூயசக்தி” அல்ல, “துரோகசக்தி” எனும் சொற்றொடரைப் பயன்படுத்தி கடுமையாக தாக்கினார். இந்தப் பதிவு தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்து பக்தர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள், நீதிமன்ற அவமதிப்பு செய்யும் செயலுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தவெக அரசோ, பாரம்பரிய நடைமுறையைத் தொடர்வதாகவும், அமைதியை பேணுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்ந்து சட்டப் போராட்டமாகவும், அரசியல் விவாதமாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
