புதுக்கோட்டை மாவட்டம், அண்டக்குளம் அருகே உள்ள ஒடுகம்பட்டி குடும்பம் கொழிஞ்சி உயிர்ச்சூழல் பண்ணை மற்றும் பயிற்சி மையத்தில் இயற்கை விவசாயிகள் மாநாடு–2026 இன்று உற்சாகமாக நடைபெற்றது.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள், பெண் விவசாயிகள் மற்றும் இயற்கை விவசாய ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
இயற்கை விவசாயத்தின் அவசியம், அதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள், மண் வளத்தை பாதுகாக்கும் முறைகள் மற்றும் பாரம்பரிய விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து நிபுணர்கள் விரிவாக விளக்கமளித்தனர். அன்றாட வாழ்வில் ஏற்படும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு மூலிகைச் செடிகளின் பயன்பாடு, இயற்கை மருத்துவத்தின் சிறப்புகள் மற்றும் அடுத்த தலைமுறைக்கான பாதுகாப்பான உணவு உற்பத்தியின் அவசியம் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மாநாட்டில் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரக்கன்றுகள் நடுவதன் அவசியம், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் மரவகைகள் மற்றும் அவற்றை நடுவதற்கான சரியான இடங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், பாரம்பரிய நெல் விதைகள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட குளியல் சோப், நாட்டுச் சர்க்கரை, அவல், கறிவேப்பிலை பொடி, செம்பருத்தி தேநீர், மஞ்சள் தூள் உள்ளிட்ட இயற்கை பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றன. கடந்த ஆண்டு இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மாநாட்டில் பங்கேற்ற விவசாயிகளுக்கு மதிய உணவு, மரக்கன்றுகள் வழங்கப்பட்டதுடன், இயற்கை விவசாயம் மேற்கொள்ள விரும்புவோருக்கு வங்கிகள் மூலம் கடன் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
