ரத்து செய்யப்பட்ட நீட் மறுதேர்வு ஜூன் 21-ஆம் தேதி நடைபெறும் என தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது.
2026 மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில், இந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் மறுதேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி, வரும் ஜூன் 21, ஞாயிற்றுக்கிழமை அன்று மறுதேர்வு நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.
மத்திய அரசின் ஒப்புதலுடன் இந்த மறுதேர்வு நடத்தப்படுகிறது.
ஏற்கனவே விண்ணப்பித்த மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. பழைய பதிவுகளே செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுதேர்வுக்கு மாணவர்கள் தனியாகக் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. மேலும், மே மாதம் நடந்த தேர்விற்காகச் செலுத்தப்பட்ட கட்டணத்தைத் திரும்ப வழங்கவும் NTA நடவடிக்கை எடுத்துள்ளது.
மறுதேர்வுக்கான புதிய ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 011-40759000 என்ற எண்ணையோ அல்லது neet-ug@nta.ac.in என்ற மின்னஞ்சலையோ தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
