இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் நியூசிலாந்துக்கு முதல் முறையாக அரசுமுறை பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா – நியூசிலாந்து இடையே கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) இந்தப் பயணத்துக்கு முக்கிய பின்னணியாக அமைந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 95 சதவீத சுங்க வரிகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
நியூசிலாந்துக்கு கடைசியாக 1986-ம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமரான ராஜீவ்காந்தி பயணம் மேற்கொண்டார். அதற்குப் பிறகு கடந்த 40 ஆண்டுகளாக எந்த இந்தியப் பிரதமரும் அந்நாட்டுக்கு அதிகாரப்பூர்வ பயணம் செய்யவில்லை. எனவே மோடியின் இந்தப் பயணம் இருதரப்பு உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
வருகிற 10-ம் தேதி ஆக்லாந்துக்கு பிரதமர் மோடி வந்தடைய உள்ளார். அங்கு ஆக்லாந்து அரசு மாளிகையில் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்படும். பின்னர் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுடன் இருதரப்பு சந்திப்பு நடைபெறும். இந்தச் சந்திப்பின்போது வர்த்தகம், முதலீடு, கடல்சார் பாதுகாப்பு, கல்வி, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, சுற்றுலா, விளையாட்டு மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரிவான பேச்சுவார்த்தை நடைபெறும்.
மேலும், நியூசிலாந்து எதிர்க்கட்சித் தலைவர் கிறிஸ் ஹிப்கின்ஸ் உடனும் பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளார். அதன்பிறகு இரு நாடுகளின் வணிகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்துவார். பயணத்தின் இரண்டாவது நாளான 11-ம் தேதி பிரதமர் இந்தியா திரும்புகிறார்.
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் இன்று சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், “இந்தியப் பிரதமர் மோடியின் முதல் அதிகாரப்பூர்வ பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு இது நிகழ்வது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்தார். இந்தியா உலகின் மிகப் பெரிய மற்றும் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்று என்றும், நியூசிலாந்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் நாடு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஏப்ரல் மாத ஒப்பந்தம் நியூசிலாந்துக்கு அதிக வேலைவாய்ப்புகள், ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் என்று லக்சன் வலியுறுத்தினார். 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியச் சந்தை நியூசிலாந்து பொருட்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும். இதன் மூலம் நியூசிலாந்து மக்களுக்கு அதிக வருவாய் மற்றும் உயர் ஊதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பது அவரது நம்பிக்கை.
இந்தப் பயணம் இந்தியா-நியூசிலாந்து இடையிலான வெற்றிகரமான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும். இரு நாடுகளும் பொதுவான ஜனநாயக மதிப்புகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய அமைதியில் பகிர்ந்து கொள்ளும் நலன்களின் அடிப்படையில் உறவுகளை விரிவுபடுத்தும் வாய்ப்பாக இது அமையும்.
