ரயில் பயணிகளின் நீண்டகால எதிர்பார்ப்புக்கு பதிலளிக்கும் வகையில், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), ஜூலை 15 முதல் மேம்படுத்தப்பட்ட புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்துகிறது. குறிப்பாக தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரங்களில் பயணிகள் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப சிக்கல்களை குறைத்து, விரைவான மற்றும் தடையற்ற சேவையை வழங்கும் நோக்கில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். ஆனால் தட்கல் முன்பதிவு தொடங்கும் நேரங்களில் ஒரே நேரத்தில் அதிகளவிலான பயனர்கள் இணையதளத்தை பயன்படுத்துவதால், சர்வர் செயல்திறன் குறைதல், இணையப் பக்கங்கள் தாமதமாக திறப்பது, கேப்ட்சா சரிபார்ப்பில் ஏற்படும் காலதாமதம், ஓ.டி.பி. தாமதமாக கிடைப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்து இருந்து வந்தன. இதன் காரணமாக, சில நிமிடங்களில் முடிவடையும் தட்கல் முன்பதிவில் பல பயணிகள் டிக்கெட் பெறும் வாய்ப்பை இழந்தனர்.

இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பீட்டா இணையதளத்தில், தேவையற்ற கேப்ட்சா சரிபார்ப்புகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், முன்பதிவின் வேகத்தை பாதித்த பாப்-அப் சாளரங்களும் நீக்கப்பட்டுள்ளன. மேலும், எளிமையான வடிவமைப்பு, விரைவாக ஏறும் இணையப் பக்கங்கள், மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸ் மற்றும் அதிவேக தொழில்நுட்ப வசதிகள் இணைக்கப்பட்டுள்ளதால், பயனர்கள் சிரமமின்றி டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தளத்தின் செயல்திறன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பயணிகளின் கருத்துகளின் அடிப்படையில் மேலும் பல மேம்பாடுகள் மேற்கொள்ளப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜூலை 15 முதல் நடைமுறைக்கு வரும் இந்த புதிய இணையதளம், குறிப்பாக தட்கல் டிக்கெட் முன்பதிவில் ஏற்பட்டு வந்த தொழில்நுட்ப தடைகளை பெருமளவில் குறைத்து, பயணிகளுக்கு வேகமான மற்றும் நம்பகமான சேவையை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version