சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடல் ஆரோக்கியம் மற்றும் எளிய போக்குவரத்து முறையை உலகளவில் ஊக்குவிக்கும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3-ஆம் தேதி ‘உலக சைக்கிள் தினம்’ (World Bicycle Day) அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், மிதிவண்டி பயன்படுத்துவதால் மனித குலத்திற்கும், நாம் வாழும் பூமிக்கும் கிடைக்கும் நன்மைகள் குறித்த ஒரு சிறப்பு விழிப்புணர்வு தொகுப்பு இதுவாகும்.
இன்றைய நவீன இயந்திர வாழ்க்கை முறையில் உடல் உழைப்பு குறைந்துவிட்ட சூழலில், மிதிவண்டி ஓட்டுவது ஒரு சிறந்த மற்றும் எளிமையான உடற்பயிற்சியாக கருதப்படுகிறது. தினமும் சைக்கிள் ஓட்டுவது இரத்த ஓட்டத்தைச் சீராக்கி, இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கிறது.
உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, தேவையற்ற கலோரிகளை எரிக்க உதவுகிறது. உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க இது ஒரு சிறந்த வழி. சைக்கிள் ஓட்டும்போது மூளையில் ‘எண்டோர்பின்’ போன்ற மகிழ்ச்சியான ஹார்மோன்கள் சுரப்பதால், மன அழுத்தம், பதற்றம் நீங்கி மன அமைதி கிடைக்கிறது. கால்கள், இடுப்பு மற்றும் தொடைப் பகுதி தசைகளை வலுவாக்குவதுடன், மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது.
இதுமட்டும்மல்லாமல், வளர்ந்து வரும் நகரமயமாக்கலில் காற்று மாசுபாடு மற்றும் புவி வெப்பமயமாதல் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், சைக்கிள்கள் மிகச்சிறந்த தீர்வாக அமைகின்றன.
மோட்டார் வாகனங்களைப் போல மிதிவண்டிகளில் இருந்து எவ்வித நச்சுப் புகையோ, கார்பன் உமிழ்வோ வெளியாவது இல்லை. இது தூய்மையான காற்றுக்கு வழிவகுக்கிறது.
இயந்திர சத்தங்கள் இல்லாத அமைதியான போக்குவரத்தை வழங்குவதன் மூலம், நகரங்களின் ஒலி மாசைக் குறைக்க உதவுகிறது. பெட்ரோல், டீசல் போன்ற இயற்கை எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து, எதிர்காலச் சந்ததிக்கான ஆற்றல் வளங்களைப் பாதுகாக்கப் பயன்படுகிறது.
தனிமனிதப் பொருளாதார ரீதியாகவும் மிதிவண்டி ஒரு சிறந்த தேர்வாகும். எரிபொருளுக்கான தினசரி செலவு மிச்சமாவதுடன், வாகனப் பராமரிப்புச் செலவுகளும் பெருமளவு குறைகின்றன. குறுகிய தூரப் பயணங்களுக்கு மிதிவண்டியைப் பயன்படுத்துவது போக்குவரத்து நெரிசலையும் தவிர்க்க உதவுகிறது.
உலக மிதிவண்டி தினமான இன்று, சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும், நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வாரத்தில் சில நாட்களாவது குறுகிய தூரப் பயணங்களுக்கு மிதிவண்டியைப் பயன்படுத்த நாம் அனைவரும் உறுதியேற்போம்.
