மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய திரைப்பட விருதுகளில், ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காகச் சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதையும், தான் தயாரித்து, இயக்கி, நடித்த ‘ராயன்’ படத்திற்காகச் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் நடிகர் தனுஷ் வென்றுள்ளார்.
இதற்காக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சீமான் தனது வாழ்த்து அறிக்கையில், “தமிழ்த்திரையின் முன்னணி நடிகர், அன்புத்தம்பி தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காகச் சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதையும், ‘ராயன்’ படத்திற்காகச் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் வென்றுள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தருகிறது. சிறந்த நடிகராக 3 முறையும், சிறந்த திரைப்படங்களுக்கான விருதைத் தயாரிப்பாளராக 2 முறையும், இயக்குநராக 1 முறையும் என ஆறாவது முறையாக இந்திய அரசின் விருதை வென்றிருப்பது அவருடைய கடின உழைப்பிற்கும், ஒப்படைப்பு மிக்க கலைப்பணிக்கும் கிடைத்துள்ள உயரிய அங்கீகாரமாகும்” என்று பாராட்டியுள்ளார்.
மேலும், “ஏற்ற கதாபாத்திரம் எதுவாயினும் அதன் அசலாகவே வாழ்ந்து, அசத்திய நடிப்பினை வெளிப்படுத்தி, தம்பி தனுஷ் போன்ற ஆகச்சிறந்த திரைக்கலைஞர்களின் கைகளில் தரப்படும் உயரிய விருதுகள் ஒவ்வொன்றும், அந்த விருதுகளுக்கே அளப்பரிய பெருமையை தருகின்றன. நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனத் திரைத்துறையின் பல்வேறு பரிமாணங்களிலும் தம்முடைய பன்முகத்திறனை வெளிப்படுத்தும் தம்பி தனுஷ், மேலும் பல ஆகச்சிறந்த படைப்புகள் தந்து தமிழ்த்திரைக்கலையை உலக அரங்கில் உயர்த்தும் உன்னத சாதனையைப் படைத்திட என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!” என்று சீமான் வாழ்த்தியுள்ளார்.
