சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், மின் கட்டண குளறுபடி தொடர்பாக தவறு செய்த அதிகாரிகள் மற்றும் மின் கணக்கீட்டாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மின் கட்டணம் தொடர்பாக வெளியான தலைமைப் பொறியாளரின் சுற்றறிக்கை குறித்து விளக்கமளித்த அவர், நெல்லை மாவட்டத்தில் இருந்து வந்த புகாரைத் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் சரியான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக பொதுவான சுற்றறிக்கை மட்டுமே அனுப்பப்பட்டதாக கூறினார். ஆனால், அதை சமூக வலைதளங்களில் தவறாகப் பரப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தாம்பரம் உள்ளிட்ட சில பகுதிகளில் அதிகப்படியான மின் கட்டணம் வந்ததாக புகார்கள் எழுந்துள்ளதால், அங்கு மீண்டும் மின் கணக்கீடு செய்ய உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். தற்போது மின் கணக்கீடு செய்ய வேண்டிய 5,500 பணியிடங்களில் வெறும் 800 பேர் மட்டுமே பணியாற்றுவதால், மனிதவள பற்றாக்குறையும் இந்த பிரச்சினைக்கு காரணமாக இருக்கலாம் என்றார்.

மின் கணக்கீட்டில் தவறு செய்தது உறுதியானால், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுகுறித்து நாளை மின்வாரிய அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தவறுதலாக அதிக மின் கட்டணத்தை செலுத்தியிருந்தால், அந்த தொகை டிஜிட்டல் முறையில் நுகர்வோரின் கணக்கில் டெபாசிட் தொகையாக பதிவு செய்யப்பட்டு, அடுத்தமுறை கழித்துக்கொள்ளப்படும்; யாருக்கும் நஷ்டம் ஏற்படாது என்றும் உறுதியளித்தார்.

கடந்த மூன்று முதல் நான்கு நாட்களாக மட்டுமே இந்த குளறுபடி குறித்த தகவல்கள் வந்துள்ளதாகவும், தற்போது ஏழு இடங்களில் மட்டும் மறு கணக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version