தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் தஞ்சை மத்திய மாவட்ட அயலக அணி தலைவர் .முத்தமிழ்ச்செல்வனின் மகன் மலரவன் – காவ்யாஸ் திருமண விழா நடைபெற்றது. இத்திருமணவிழாவில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், ஷோபா மாடல் ஆட்சியின் போலிப் பிம்பம் கடந்த ஒரு மாதத்தில் அடித்து துவைக்கப்பட்டு கிடக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்த ஆட்சியின் அவலங்களை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஆட்சியின் சறுக்கல்களை, தவறுகளை இளைஞர்கள் இன்று தட்டிக் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவ்வாறு தட்டிக் கேட்கும் இளைஞர்களை, திமுகவினரை இந்த சோபா மாடல் ஆட்சி கைது செய்யத் தொடங்கி இருக்கிறார்கள்.

தூயசக்தி எனக் கூறிவிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள், ஆட்சிக்கு வந்த ஐந்தாவது நிமிடத்திலேயே குதிரைபேரத்தை தொடங்கி விட்டனர்.

சோபா போகும், பின்னாடியே முதலமைச்சர் போவார், அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு அவருக்குப் பின்னால் போகக் கூடிய காட்சிகள்தான் இந்த ஒரு மாதத்தில் ரிப்பீட் மோடில் நடந்து கொண்டிருக்கிறது.

ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் காவிரி நீரை திறக்கவில்லை. குறுவை சாகுபடிக்கு அரசு அறிவித்த ஸ்பெஷல் பேக்கேஜ் போதாது என விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.

இதனை சட்டமன்றத்தில் பேசினால், விவசாயிகளை நாங்கள் தூண்டிவிடுவதாக அவர்களை முதலமைச்சர் கொச்சைப்படுத்துகிறார்.

 தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை படுபாதாளத்தில் இந்த ஆட்சி தள்ளியிருக்கிறது. இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசினால், அதற்கு முதலமைச்சர் பதில் சொல்வது இல்லை. சட்டமன்றத்தையே ஷூட்டிங் ஸ்பாட்டாக்கி அதன் தரத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்பாவை காணோம் என குட்டிக்கதை கூறும் முதலமைச்சரைத்தான் காணவில்லை என பெரம்பூர் தொகுதி மக்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

கிண்டல் செய்வதாகக் கூறி தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்ளும் முதலமைச்சர், சட்டமன்றத்தில் டான்ஸ் மட்டும்தான் ஆடவில்லை. அடுத்த கூட்டத்தில் அதுவும் ஆடுவார் என்பது எங்களின் எதிர்பார்ப்பு. இவ்வளவு பெரிய பேரிடரில் மாட்டியிருக்கும் தமிழ்நாட்டை காப்பது நமது பொறுப்பு.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version