முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று காங்கிரஸ், இடது சாரிகள், ஐயூ எம்.எல்.ஏ கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பேற்றது.
இதனைத் தொடர்ந்து அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துள்ளனர்.
தொடர்ந்து அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் தவெகவில் இணைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தவெக-வில் ஓ.பன்னீர்செல்வம் இணையப் போவதாக செய்தி பரவி வருகிறது.
அதிமுகவின் முக்கிய முகமாகவும் தமிழ்நாட்டு முதலமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் நிலவும் உள்கட்சி குழப்பத்தால் வெளியேற்றப்பட்ட நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டு உதயசூரியன் சின்னத்தில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
இந்தநிலையில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஓ.பி.எஸ் இணையப் போவதாக செய்தி பரவியது.
ஆனால், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைய போவதாக பரவும் செய்தி உண்மை இல்லை என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
