வேலூர் மாவட்டம் பிள்ளையார் குட்டை மலை கிராமத்தில் சட்டவிரோதமாக வீட்டில் நாட்டு துப்பாக்கி மறைத்து வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, வனச்சரகர் அலுவலர் பாபு தலைமையிலான வனத்துறையினர் பிள்ளையார் குட்டை கிராமத்தில் ஒவ்வொரு வீடாக தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது, ஒரு வீட்டில் 2 நாட்டு துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சாமிநாதன்(53), என்பவர் தனது வீட்டில் நாட்டு துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. பின்னர், 2 நாட்டு துப்பாக்கிகளை கைப்பற்றிய வனத்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சாமிநாதனை கைது செய்தனர். மேலும் வீட்டில் இருந்த மான் இறைச்சியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட சாமிநாதனை வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
