பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று, மத்திய அமைச்சர்கள் பலர் தனித்தனி கார்களில் பயணிக்காமல், ‘ஷேரிங்’ முறையில் காரில் பயணித்து, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றனர்.
உலக அளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கு மத்திய அமைச்சர்கள் உரிய முறையில் பதிலளித்துள்ளனர். தனித்தனி கார்களில் பயணம் செய்யும் வழக்கத்தைக் குறைத்து, பலர் ஒரே காரைப் பகிர்ந்து கொண்டு அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்காசியப் பகுதியில் தீவிரமடைந்துள்ள போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல நாடுகளில் எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்து, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்து வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர்களும் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.
இந்த நிலையில், எரிபொருள் சிக்கனத்தை ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் மோடி பொதுமக்களுக்கு வலியுறுத்தியிருந்தார். “தேவையில்லாமல் சொந்த வாகனங்களைப் பயன்படுத்த வேண்டாம். பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துங்கள். வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பு உள்ளவர்கள் அதை முழுமையாகப் பயன்படுத்துங்கள்” என்று அவர் அறிவுறுத்தினார். மேலும், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும் எனக் கோரினார்.
பிரதமரே முன்னுதாரணமாக செயல்பட்டு, தனது அலுவல் கான்வாயில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கையை பெருமளவு குறைத்தார். அவரைத் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் இருசக்கர வாகனத்தில் பயணிக்கத் தொடங்கினார். சில மாநில முதலமைச்சர்கள் மின்சார வாகனங்களுக்கு மாறினர். டெல்லியில் பல அமைச்சர்கள் மெட்ரோ ரயிலைப் பயன்படுத்தி அலுவலகம் வந்துசெல்லும் நடைமுறையை ஏற்றனர்.
இந்நிலையில், ‘சேவா தீர்த்’ பகுதியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு வந்த அமைச்சர்கள் இந்த முறை கார் பகிர்ந்து பயணித்தனர். நிதின் கட்கரி, ஜே.பி. நட்டா, கிரண் ரிஜிஜு, ராஜீவ் ரஞ்சன் சிங், மனோகர் லால் கட்டார், பிரஹலாத் ஜோஷி, கஜேந்திர சிங் ஷெகாவத், அஸ்வினி வைஷ்ணவ், மன்சுக் மாண்டவியா, சிவராஜ் சிங் சவுகான், சி.ஆர். பாட்டீல், கிஷன் ரெட்டி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் சில குழுக்களாக இணைந்து வெவ்வேறு கார்களில் வந்து கூட்டத்தில் பங்கேற்றனர்.
முந்தைய அமைச்சரவை கூட்டத்தின்போது பிரதமர் மோடி அமைச்சர்களிடம், “ஒரே இடத்துக்கு செல்லும்போது எத்தனை பேர் ஒரே காரில் வருகிறீர்கள்?” என்று நேரடியாகக் கேட்டிருந்தார். இந்தக் கேள்விக்குப் பிறகு அமைச்சர்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். எரிபொருள் சிக்கனம் மூலம் அந்நிய செலாவணியைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைத்தல், கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கங்கள் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதமரின் இந்த அழைப்பு நாடு முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுமக்களும் இதைப் பின்பற்றி வருகின்றனர். இத்தகைய முயற்சிகள் நீண்டகால அடிப்படையில் நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
