பிரதமர் மோடி 3 நாள் அரசு முறை பயணமாக செஷல்ஸ் புறப்பட்டு சென்றார்.
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான செஷல்ஸ் நாட்டின் 50-ஆம் ஆண்டு தேசிய தினம் வரும் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் தலைமை விருந்தினராகப் பங்கேற்கும் பிரதமர் மோடி 3 நாள் அரசு முறைப் பயணமாக செஷல்ஸ் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
இந்தக் கொண்டாட்டத்தில் இந்திய கடற்படையின் 2 கப்பல்கள் மற்றும் பாதுகாப்பு படைப் பிரிவினரும் பங்கேற்கின்றனர். பிரதமர் தனது இந்தப் பயணத்தில் செஷல்ஸ் அதிபர் பேட்ரிக்குடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும், செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் பிரதமர் மோடி அங்குள்ள இந்திய வம்சாவளியினரிடம் கலந்துரையாடலையும் மேற்கொள்கிறார்.
வரலாறு, கலாசாரம், மக்கள் ரீதியிலான தொடர்புகளில் இந்தியா மற்றும் செஷல்ஸ் நீண்டகால கூட்டுறவு கொண்டுள்ளன. பிரதமரின் தற்போதைய பயணம், இருதரப்பு வலுவான, நீடித்த உறவை மீண்டும் உறுதி செய்வதுடன், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும் என்று மத்திய வெளியுறவு அமைச்சரகம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி ஏற்கனவே 2015-ஆம் ஆண்டு செஷல்ஸ் நாட்டுக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
