இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையிலான வரலாற்று, கலாச்சார மற்றும் கடல்சார் உறவுகளை வலியுறுத்தி, இரு நாடுகளும் நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தை நோக்கி இணைந்து பயணிப்பதாக தெரிவித்தார்.

இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ வழங்கிய சிறப்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 140 கோடி மக்களின் சார்பிலும், ஜனநாயகத்தின் தாயகமான இந்தியாவின் குடிமகனாகவும் உங்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்” என்றார்.

மேலும், “இன்று காலை இந்தோனேசிய மக்கள் எனக்கு அளித்த அன்பும், உற்சாகமான வரவேற்பும் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று” என்றும் அவர் கூறினார்.

இந்தியா மற்றும் இந்தோனேசியாவை இணைக்கும் கடல்சார் தொடர்பைப் பற்றி பேசிய மோடி, “நமது இரு நாடுகளுக்கும் கடல் என்பது ஒருபோதும் தூரத்தை குறிக்கவில்லை. அது எப்போதும் நம்மை இணைக்கும் பாலமாகவே இருந்துள்ளது. எதிர்காலத்திலும் அது நமது கூட்டாண்மையின் மையமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

மேலும், “இந்தியா, இந்தோனேசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் என்ற பெயர்களே நமது ஆழமான உறவுகளுக்குச் சான்றாக உள்ளன” என்று குறிப்பிட்டார்.

2018-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விரிவான மூலோபாய கூட்டாண்மை தற்போது புதிய உயரத்தை எட்டியுள்ளதாக பிரதமர் மோடி கூறினார். வளர்ச்சி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்தியா மற்றும் இந்தோனேசியா இணைந்து அந்த நாட்டின் தேர்தல் அமைப்பை நவீனப்படுத்தும் வகையில் புதிய வாக்குப்பதிவு தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதிலும் முக்கிய ஒப்பந்தங்களை அறிவித்துள்ளன.

ஜூலை 6 முதல் 8 வரை நடைபெறும் தனது மூன்று நாள் அரசு முறைப் பயணத்தின் போது, பிரதமர் மோடி இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். இது மோடியின் நான்காவது இந்தோனேசியப் பயணமாகும்.

மேலும், ஆசியான் (ASEAN) அமைப்பின் மையப் பங்கிற்கு இந்தியா எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றும், சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்கும் நோக்கில் இந்தியா–இந்தோனேசியா கூட்டாண்மை மேலும் வலுப்பெறும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version