நாடு முழுவதும் நடைபெற்ற நீட் (NEET) மறுதேர்வில் பங்கேற்ற லட்சக்கணக்கான மாணவ-மாணவிகளுக்கு போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட எந்தவித சிரமங்களும் ஏற்படக்கூடாது என்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லி விமான நிலையத்தில் சுமார் 45 நிமிடங்கள் காத்திருந்த சம்பவம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

நேற்று நாடு முழுவதும் அமைதியான முறையில் நீட் மறுதேர்வு நடைபெற்றது. இந்தியாவின் 551 நகரங்களில் உள்ள 5,440 தேர்வு மையங்களில் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தமிழ்நாட்டில் 31 மாவட்டங்களில் 307 தேர்வு மையங்கள் செயல்பட்டன. இங்கு 1,42,489 மாணவ-மாணவிகள் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் மட்டும் 43 தேர்வு மையங்களில் 22,128 பேர் பங்கேற்றனர். மதியம் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5.15 மணி வரை நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று கொல்கத்தாவில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி பிற்பகல் 1.15 மணியளவில் டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தார். பொதுவாக விமான நிலையத்திற்கு வந்த பின்னர் உடனடியாக தனது இல்லத்திற்கு புறப்படும் அவர், இம்முறை விமான நிலையத்திலேயே தங்கினார். தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவர்களின் பயணத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த பிரதமர், தேர்வு தொடங்கும் வரை காத்திருக்க முடிவு செய்தார்.

பிரதமரின் வாகன அணிவகுப்பு நகரும் போது பாதுகாப்பு காரணங்களுக்காக சில முக்கிய சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கம். இத்தகைய கட்டுப்பாடுகள் மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவரது பயணத்தை தேர்வு நேரத்திற்குப் பிறகு ஒத்திவைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய பின்னரே பிரதமர் தனது இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

இந்த நடவடிக்கை மாணவர்களின் எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரதமரின் அக்கறையை பிரதிபலிக்கிறது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. நீட் தேர்வு மருத்துவக் கனவுகளை நனவாக்கும் முக்கிய தேர்வாகக் கருதப்படுவதால், மாணவர்களுக்கு சீரான சூழலை உருவாக்கும் வகையில் எடுக்கப்பட்ட இந்த முடிவு பலரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

நீட் மறுதேர்வு சுமுகமாக நடைபெற்றதால், மாணவர்கள் முழு ஒருமுகத்துடன் தேர்வு எழுதியதாக தேர்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். போக்குவரத்து சீர்குலையாமல் இருக்க போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இந்த சம்பவம் அரசியல் தலைவர்களிடையேயும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version