நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெற்ற மாணவர் போராட்டங்களின்போது காவல்துறையினர் மேற்கொண்டதாகக் கூறப்படும் அத்துமீறல்கள் தொடர்பான மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், “போராட்டம் நடைபெறுகிறது என்பதற்காகவே காவல்துறையினர் அளவுக்கு மீறிய பலத்தைப் பயன்படுத்தவோ, தடியடி நடத்தவோ முடியாது” என்று கடுமையாகக் கருத்து தெரிவித்துள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஜா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று விசாரித்தது. டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் நீட் போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக மனுக்களில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
விசாரணையின்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த், “அமைதியான, சட்டபூர்வமான போராட்டம் நடத்துவது அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமையாகும். போராட்டம் நடைபெறுகிறது என்பதற்காகவே காவல்துறையினர் அளவுக்கு மீறிய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது” என்று தெரிவித்தார்.
மேலும், போராட்டங்களை கையாள்வதற்கான தெளிவான நடைமுறை (Protocol) அவசியம் என்றும், மக்கள் தங்களது கருத்துகளை அமைதியாக வெளிப்படுத்துவதற்கு உரிய இடமும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது. அதே நேரத்தில், சமூக விரோதிகள் அல்லது சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறியது.
காவல்துறையினரால் அத்துமீறல்கள் நடந்திருந்தால், அவை சுயாதீனமாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு காரணமானவர்கள் யார், என்ன விதிமீறல்கள் நடந்தன, எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க என்னென்ன கட்டாய வழிகாட்டுதல்கள் தேவை என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
இதற்கிடையில், போராட்டங்களின்போது காயமடைந்த காவல்துறையினரின் குடும்பங்கள் சார்பிலும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. காவலர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், போராட்டங்களின்போது அவர்கள் தாக்கப்பட்டதாகக் கூறி அந்த தரப்பும் தனது கருத்தை முன்வைத்தது.
இதுகுறித்து நீதிபதி ஜோய்மால்யா பக்சி, “காவல்துறையினருக்கோ அல்லது போராட்டக்காரர்களுக்கோ ஏற்பட்ட காயங்கள் அனைத்தும் சமமான கவலையை ஏற்படுத்துபவையே. இந்த விவகாரத்தை முழுமையான பார்வையுடன் அணுக வேண்டும்” என்று தெரிவித்தார்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பினரின் வாதங்களையும் கேட்க உச்சநீதிமன்றம், செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
