திருத்தணி: தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தேர்தல் வெற்றிக்கு நேர்த்திக்கடன் என்று வேண்டியபடி, வெள்ளி வேலை காணிக்கையாகச் செலுத்தினார். கையில் வெள்ளி வேலுடன் மலைக்கோயிலை வலம் வந்து வழிபட்ட அவர், பின்னர் தங்கத் தேரை இழுத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கோயிலில் இருந்து வெளியேறிய பிரேமலதா நிருபர்களிடம் பல்வேறு அரசியல், சமூகப் பிரச்சினைகள் குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ.வை இரவோடு இரவாகக் கைது செய்யாமல், எச்சரித்து அனுப்பியிருக்கலாம் என்று கூறினார். இந்த நடவடிக்கை அரசின் வன்முறை மனப்பான்மையை வெளிப்படுத்துவதாகவும் அவர் விமர்சித்தார்.

தமிழக அரசு கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு, குடிநீர், உணவு மற்றும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கில் யார் தவறு செய்தாலும் தண்டனை தப்பாது என்றும், முருகரிடம் இருந்து தப்ப முடியாது என்றும் தெரிவித்தார்.

வரும் பட்ஜெட்டில் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் திட்டங்கள் இடம்பெற வேண்டும் என்று பிரேமலதா வலியுறுத்தினார். நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாகவும், மின்கட்டண உயர்வைக் குறைக்க முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மேகதாது அணைக்கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஒகேனக்கல்லில் தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார். விவசாயிகளின் நலனுக்காக விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், சினிமாவில் விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்த முதலமைச்சர் விஜய், நிஜ வாழ்க்கையிலும் அதை நிரூபிக்க வேண்டும் என்று பிரேமலதா கூறினார். அவ்வாறு செய்தால்தான் அவர் உண்மையான ஹீரோவாக மக்களால் போற்றப்படுவார்; இல்லையெனில் அது வெறும் கண்துடைப்பு மட்டுமே என்று தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version