இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவியில் இருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார். தொடர்ந்து 4,399 நாட்கள் பிரதமராகப் பதவியில் நீடித்து, இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லுக்காக உலகத் தலைவர்கள் பலரும் பிரதமர் மோடிக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தனது எக்ஸ் பக்கத்தில், அண்மையில் ரோமில் நடைபெற்ற சந்திப்பை நினைவு கூர்ந்தார். இந்தியா – இத்தாலி இடையிலான புதிய ‘சிறப்பு வியூகக் கூட்டாண்மை’ இரு நாட்டு மக்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் எனக் குறிப்பிட்டார்.

இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க தனது வாழ்த்து செய்தியில், “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மக்கள் உங்கள் தலைமையின் மீது மீண்டும் மீண்டும் வைத்துள்ள நம்பிக்கைக்கு இந்தச் சாதனை ஒரு சான்றாகும்” என்று பாராட்டியுள்ளார்.

பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபே, பிரதமர் மோடியை உலகத் தலைவர்களுக்கான ஒரு சிறந்த “ரோல் மாடல்” என்று வர்ணித்ததுடன், இந்தியாவின் கடந்த பத்தாண்டுகால வளர்ச்சிப் பயணத்தைப் பாராட்டினார்.

நைஜீரிய அதிபர்  போலா அகமது தினுபு, மோடியைத் தனது தனிப்பட்ட நண்பர் மற்றும் நம்பகமான கூட்டாளி எனக் குறிப்பிட்டு இந்தியாவின் முன்னேற்றத்திற்கான மோடியின் தைரியத்தையும் அர்ப்பணிப்பையும் பாராட்டினார். (பிரதமர் மோடி நைஜீரியாவின் உயரிய ‘GCON’ விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது).

மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம், பிரதமர் மோடியின் அர்ப்பணிப்புள்ள பொதுச்சேவை இந்தியாவை உலக அரங்கில் உயர்த்தியுள்ளது என்றும், இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்தார்.

ஜான் கார்னின் (அமெரிக்க செனட்டர்): கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு மற்றும் உலகளாவிய செல்வாக்கு ஆகியவற்றைக் குறிப்பிட்டு, இந்தியா-அமெரிக்கா உறவு புதிய உயரத்தை எட்டியுள்ளதாகப் பாராட்டினார்.

கமலா பிரசாத்-பிஸேசர் (டிரினிடாட் மற்றும் டொபாகோ பிரதமர்): சாதாரண பின்னணியில் இருந்து வந்து உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை வழிநடத்தும் பிரதமர் மோடியின் வாழ்க்கை, எல்லைகளைத் தாண்டி பலருக்கும் ஊக்கமளிப்பதாகக் கூறினார்.

ஷெரிங் தோப்கே (பூடான் பிரதமர்): பிரதமர் மோடியை “எனது நண்பர், எனது சகோதரர், எனது வழிகாட்டி” என்று குறிப்பிட்டு, தனது வாழ்த்துக் கடிதத்தைப் பகிர்ந்துள்ளார்.

முகமது முய்சு (மாலைத்தீவு அதிபர்): பரஸ்பர மரியாதை மற்றும் இறையாண்மை சமத்துவத்தின் அடிப்படையில் இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

அபி அகமது அலி (எத்தியோப்பிய பிரதமர்), உக்நாகின் குரேல்சுக் (மங்கோலிய அதிபர்), வில்லியம் ரூட்டோ (கென்ய அதிபர்), லீ ஜே-மியுங் (தென் கொரிய அதிபர்) ஆகியோரும் பிரதமர் மோடியின் இந்த வரலாற்றுச் சாதனைக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version