தமிழ்நாட்டில் சென்னை மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தனியார் பேருந்துகள் பெருமளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்பதால், தனியார் பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் அலைமோதும்.

இதனை பயன்படுத்தி பல தனியார் பேருந்துகள் விதிமுறையை மீறி அதிகளவு கட்டணம் வசூல் செய்வதாக பல காலங்களாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. அத்தோடு பல பேருந்துகளில் கட்டணத்திற்கு ஏற்ப வசதிகள் இல்லை என்ற புகாரும் எழுந்து வருகிறது. அந்த வகையில், கோவையில் இருந்து செங்கல்பட்டு செல்வதற்காக ரூ.1,614 கொடுத்து பிரபல தனியார் பேருந்தில் பயணி ஒருவர் பயணித்துள்ளார்.

அந்த பேருந்து சுகாதாரமற்ற முறையில் இருப்பதை அந்த பயணி வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். பயணிகளின் பாதுகாப்பிற்கும் வசதிக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டிய முன்னணி ஆம்னி பேருந்து நிறுவனங்கள், சீரான பராமரிப்பின்றி இவ்வாறான சேவைகளை வழங்கிப் பயணிகளின் பணத்தைச் சுரண்டி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.

சீட் முழுவதும் தூசி படிந்து காணப்படுவதுடன், பேருந்தில் ஏசி அதிகளவு இருப்பதால், எளிதில் இந்தப் பேருந்தில் பயணித்தால் வீசிங் போன்ற மூச்சுப் பிரச்னை வரும் எனவும் அந்த பயணி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். துறை சார்ந்த அதிகாரிகள் இது போன்ற தரமற்று செயல்படும் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version