ஓமன் கடற்கரைக்கு அருகே வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அமெரிக்காவின் கருத்துக்களுக்கு மத்திய அரசு மௌனம் காப்பது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா கடுமையாக விமர்சித்துள்ளார்.
எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரியங்கா காந்தி, “அமெரிக்க தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்த பிறகும் மோடி அரசின் மௌனம் வெட்கக்கேடானது. இந்த உயிரிழப்புக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக, அமெரிக்கா மிரட்டல் மற்றும் உத்தரவு மொழியைப் பயன்படுத்துகிறது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், “இந்தியா ஒரு இறையாண்மை மிக்க சுதந்திர நாடு என்பதை அமெரிக்காவுக்கு உறுதியாக எடுத்துக்கூற வேண்டும். ஆனால் சமரசம் செய்துகொண்ட பிரதமர் மோடி, நாட்டின் குடிமக்களின் பாதுகாப்பையும், இந்தியாவின் இறையாண்மையையும் காக்கத் தவறிவிட்டார்” என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா, வளைகுடா பகுதியில் வணிகக் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்தியர்கள் உயிரிழந்த நிலையில், அமெரிக்காவிடம் இந்திய அரசு மன்னிப்பு கோரியிருக்க வேண்டும் என்றார்.
“மூன்றாம் நாட்டைச் சேர்ந்த வணிகக் கப்பலை போர்நிலையில்கூட தாக்க முடியாது. இதற்கான சர்வதேச சட்டங்கள் உள்ளன. சான் ரெமோ கையேடு, 1949 ஜெனீவா ஒப்பந்தம் உள்ளிட்ட விதிமுறைகள் இதைத் தடை செய்கின்றன. நமது மக்கள் உயிரிழந்த நிலையில் இந்தியா மன்னிப்பு கோர வேண்டியிருந்தது. ஆனால் வெளிநாட்டு விவகார அமைச்சர் ஜெய்சங்கரின் பதில் மிகவும் மென்மையானதாக இருந்தது” என்று அவர் தெரிவித்தார்.
அதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவர் மனீஷ் திவாரி, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்ட கருத்துகளை கடுமையாக விமர்சித்தார்.
“ரூபியோவின் கருத்துகளில் வருத்தமோ, இரக்கமோ, அனுதாபமோ இல்லை. அவை கடுமையான மற்றும் மோதலுக்குத் தூண்டும் வகையிலானவை. இந்திய மாலுமிகளே தங்களுக்கு நேர்ந்ததற்கு காரணம் என்ற மறைமுகச் செய்தியை அவரது கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. நண்பர் நாடு எனக் கூறப்படும் இந்தியாவிடம் பேச வேண்டிய மொழி இது அல்ல” என்று அவர் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டார்.
மேலும், “ஜெய்சங்கர் – ரூபியோ இடையேயான தொலைபேசி உரையாடலின் முழு விவரத்தையும் வெளியிட வேண்டும். அமெரிக்காவின் இந்த கடுமையான அணுகுமுறைக்கு ஜெய்சங்கர் எப்படி பதிலளித்தார் என்பதை நாடு அறிய வேண்டும்” என்றும் திவாரி வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் தொடர்ந்து அமெரிக்காவின் நடவடிக்கைகளையும், மத்திய அரசின் அணுகுமுறையையும் விமர்சித்து வருகின்றனர்.
