மத்திய டெல்லியின் சன்சத் மார்க் மற்றும் கனாட் பிளேஸ் பகுதிகளில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதையடுத்து, கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த 25 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கடந்த சனிக்கிழமை அவர் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே, நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளான கடந்த ஜூலை 20-ம் தேதி, நாடாளுமன்றம் நோக்கி இளைஞர்கள் நடத்திய பேரணியின்போது போலீசார் நடத்திய தாக்குதலில் சுமார் 60 போராட்டக்காரர்கள் காயமடைந்தனர்.

இந்தநிலையில், ஜந்தர் மந்தரைச் சுற்றியுள்ள சன்சத் மார்க் மற்றும் கனாட் பிளேஸ் பகுதிகளில் நேற்று (ஜூலை 22) நள்ளிரவு மீண்டும் பதற்றம் நிலவியது. பார்க் ஹோட்டல் அருகே திரண்ட போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டை மீறிச் சென்றதாகக் கூறி, அவர்களைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசித் தாக்கினர். இந்த வன்முறையில் 2 உதவி ஆணையர்கள், ஒரு காவல் ஆய்வாளர் உட்பட மொத்தம் 5 காவல்துறையினர் காயமடைந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

போராட்டத்தால் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்க, ஜந்தர் மந்தரைச் சுற்றியுள்ள 1.5 கிலோமீட்டர் சுற்றளவில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இணையச் சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டன. நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதிக்கு அருகே மத்திய பாதுகாப்புப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

வன்முறையைத் தவிர்க்கும் நோக்கில், சிஜேபி (CJP) அமைப்பின் தன்னார்வலர்கள் ஒலிபெருக்கி மூலம் போராட்டக்காரர்களிடம் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். மேலும், போராட்டக் களத்தில் இருந்த கற்களை அகற்றும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version