2026-ஆம் ஆண்டு காரீப் பருவத்திற்குத் தேவையான யூரியா மற்றும் டிஏபி உள்ளிட்ட உரங்களை தங்கு தடையின்றி தமிழ்நாட்டிற்கு வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் வேளாண்மையை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர் என்றும், 48.27 இலட்சம் எக்டரில் நிகர சாகுபடியும், 62.25 இலட்சம் எக்டரில் மொத்த சாகுபடியும் மேற்கொள்ளப்படுவதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

வேளாண்மை- உழவர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த தனது ஆய்வின்போது, 2026-ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உரத்தேவையில், 39,001 மெட்ரிக் டன் யூரியா, 28,607 மெட்ரிக் டன் டிஏபி மற்றும் 24,235 மெட்ரிக் டன் பொட்டாஷ் ஆகிய உரங்கள் உர உற்பத்தியாளர்களால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்து அதற்கான விவரங்களையும் கடிதத்துடன் அனுப்பியுள்ளார்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருவதாலும், காரீப் பருவத்தில் அதிகபட்ச பரப்பில் பயிர் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ள நிலையில், யூரியா மற்றும் டிஏபி உரங்களின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், இத்தருணத்தில், உரப்பற்றாக்குறை ஏற்பட்டால் மாநிலத்தின் உண உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும்  கடிதத்தில் தெரிவித்துள்ள முதலமைச்சர்,

நடப்பு காரீப் பருவத்தில் 25 இலட்சம் எக்டரில் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக, 3.83 இலட்சம் மெட்ரிக் டன் யூரியா, 1.05 இலட்சம் மெட்ரிக் டன் டிஏபி மற்றும் 0.83 இலட்சம் மெட்ரிக் டன் பொட்டாஷ் ஆகியவற்றை உடனடியாக தமிழ்நாட்டிற்கு வழங்கிட உரிய அலுவலர்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி குறித்த நேரத்தில் உரங்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version