இரவு நேரத்தில் 21000 மெகாவாட் மின்சாரம் தேவை என்ற அளவில் போதிய மின்சாரம் கை இருப்பில் உள்ளது என்று தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிக்கு அருகிலுள்ள பஞ்செட்டி துணை மின் நிலையத்தில் தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் விரிவான ஆய்வு மேற்கொண்டார். மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடரும் நிலையில், துணை மின் நிலையங்களின் கட்டமைப்பு வசதிகள், மின் விநியோக அமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்து அவர் அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தலைவர் ராதாகிருஷ்ணன், “கடுமையான வெயில் காரணமாக சென்னையில் மின் நுகர்வு இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது. 5008 மெகாவாட் என்ற புதிய உச்சம் பதிவாகியுள்ளது” என்றார். மாநில அளவில் இரவு நேர மின் தேவை சுமார் 21,000 மெகாவாட்டாக உள்ள நிலையில், போதுமான மின் உற்பத்தி மற்றும் கையிருப்பு இருப்பதாக அவர் உறுதிப்படுத்தினார். இருப்பினும், இரவு நேரங்களில் மின் பயன்பாடு திடீரென அதிகரிப்பதால் ஓவர்லோட் ஏற்பட்டு, துணை மின் நிலையங்கள் மற்றும் மின் மாற்றிகளில் பழுதுகள் ஏற்படுவதே மின்தடைக்கு முக்கிய காரணம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய பாதிக்கப்பட்ட இடங்களை உடனடியாக கண்டறிந்து, கூடுதல் பீடர்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் பொருத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். மேலும், தரம் உயர்த்தப்பட்ட பல துணை மின் நிலையங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளன. இரவு நேரங்களில் அனைத்து நிலை அதிகாரிகளும் கூடுதல் ரோந்துப் பணியில் ஈடுபட்டு மின்தடைகளை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கம் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக 11 நிறுவனங்கள் மேற்கொள்ளும் சாலை வெட்டும் பணிகள் மின்வயர்களுக்கு சேதம் விளைவிப்பதால் மின்தடை அதிகரிப்பதாகவும், இதற்கு மின்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடைநிலை ஊழியர்கள் தீவிரமாகக் களப்பணி ஆற்றி வருவதாகப் பாராட்டிய ராதாகிருஷ்ணன், “சவால் நிறைந்த இந்தப் பணியில் அடிமட்ட ஊழியர்களுக்கு வீண் அழுத்தம் கொடுக்கக் கூடாது” என்று பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார். பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்க கூடுதல் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பழைய மின் கம்பங்கள் மற்றும் ஒயர்கள் மாற்றப்படாதது குறித்த கேள்விக்கு, பொதுமக்கள் புகார்களை உடனடியாக புகார் புத்தகத்தில் பதிவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக வரும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நிதிப் பற்றாக்குறை இருந்தபோதிலும் ஊழியர்களின் முயற்சியால் மின் வெட்டுப் பிரச்சினையை கட்டுப்படுத்தி வருவதாகக் கூறிய அவர், 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் போன்ற கொள்கை விவகாரங்களுக்கு தற்போது பதில் அளிக்க முடியாது என்றும், மின்வெட்டை முழுமையாகத் தீர்ப்பதில் முழு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
